Close
மே 20, 2024 6:13 மணி

முத்தமிழறிஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 28-ல் பேச்சுப் போட்டி

புதுக்கோட்டை

முன்னாள் முதல்வர் கருணாநிதி

முத்தமிழறிஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான  பேச்சுப் போட்டி வரும் 28.07.2022 அன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2022-23 -ஆம் ஆண்டில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி வருகின்ற 28.07.2022 வியாழக்கிழமை முற்பகல் 09.30 மணியளவில் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

மாவட்ட அளவில் நடத்தப்படும்  இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  அத்துடன் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களில் இருவரை மட்டுமே தேர்வு  செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சிறப்பு பரிசாக ரூ.2000 -ம் வழங்கப்டவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்துப் பள்ளிகளில் (அரசுப்பள்ளிகள், அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் ,பதின்மப் பள்ளிகள்) 6 -ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் மட்டுமே (பள்ளிக்கு ஒருவர் வீதம்) இப்போட்டியில் பங்கேற்க முடியும்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் முதற்கண் கீழ்நிலை அளவில் (வட்டார அளவில்) இப்போட்டி நடத்தப்பெற்று மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிக்கு 30 மாணாக்கர்கள் மட்டுமே தெரிவு செய்யப் பெறுவார்கள். முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மாணவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான இப்போட்டியில் பங்கேற்க முடியும்.

மாவட்ட அளவிலான போட்டியில்; பங்கேற்க பரிந்துரைக்கப் படும்  மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப் பெற்றுள்ள படிவத்தை நிறைவு செய்து அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்பம் பெற்று, போட்டி நடக்கும் நாளன்று புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளித்து போட்டியில் பங்கேற்கலாம்.

போட்டிக்குரிய தலைப்புகள் பெரும்பாலும் கலைஞர் கருணாநிதியைப்  பற்றியே அமையும். போட்டிக்கான தலைப்புகள் போட்டி நிகழ்விடத்தில் நடுவர்கள் முன்பாக அறிவிக்கப்படும்.

கீழ்நிலை அளவிலான போட்டிகளில் பங்கேற்பது தொடர்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ அல்லது தொலைபேசி 9952280798 வாயிலாகவோ அணுகலாம். இப்போட்டியில்; பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top