Close
ஜூன் 21, 2026 1:37 மணி

இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமைந்த சாலை-ரயில் சுரங்கப்பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

இந்திய உள்கட்டமைப்பு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, பிரம்மபுத்திரா ஆற்றின் படுக்கைக்கு அடியில் அமையவுள்ள நாட்டின் முதலாவது நீருக்கடியில் அமைந்த சாலை மற்றும் ரயில் சுரங்கப்பாதை திட்டத்திற்குப் பிரதமரின் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சுமார் 18,662 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அஸ்ஸாம் மாநிலத்தில் அமையவுள்ள இந்த மெகா உள்கட்டமைப்பு திட்டம், உலகிலேயே இத்தகைய இரட்டைப் பயன்பாட்டுடன் உருவாக்கப்படும் இரண்டாவது சுரங்கப்பாதை என்ற பெருமையைப் பெறுகிறது.

பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் தோண்டப்படவுள்ள இந்த சுரங்கப்பாதையின் நீளம் மட்டும் சுமார் 15.79 கிலோமீட்டர் ஆகும். மொத்த திட்ட நீளம்: அணுகு சாலைகளுடன் சேர்த்து இந்த ஒட்டுமொத்த பசுமை வழித்தடத்தின் நீளம் 33.7 கிலோமீட்டர் ஆகும்.

இது அஸ்ஸாமின் வடக்குக் கரையில் உள்ள கோஹ்பூர் மற்றும் தெற்குக் கரையில் உள்ள நுமலிகர் (NH-715) ஆகிய பகுதிகளை நேரடியாக இணைக்கிறது. இந்த சுரங்கப்பாதை ஆற்றின் மிகக் குறைந்த படுக்கை மட்டத்திலிருந்து சுமார் 32 மீட்டர் ஆழத்தில், அதிநவீன ‘டன்னல் போரிங் மெஷின்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தோண்டப்படவுள்ளது.

தற்போது, நுமலிகர் மற்றும் கோஹ்பூர் இடையே பயணிப்பவர்கள் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் பிஸ்வநாத் நகரம் வழியாகச் சுமார் 240 கிலோமீட்டர் தூரம் சுற்றியே செல்ல வேண்டியுள்ளது. இந்த நீண்ட சாலைப் பயணத்திற்கு 6 மணி நேரம் வரை ஆகிறது. புதிய நீருக்கடி சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வரும்போது, இந்தத் தூரம் வெறும் 34 கிலோமீட்டராகக் குறைந்துவிடும். இதன் மூலம், 6 மணி நேரப் பயணம் வெறும் 20 நிமிடங்களாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் ‘பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம்’ மாதிரியின் கீழ் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதில் அமையவுள்ள இரண்டு இணையான குழாய்களில், ஒவ்வொன்றும் இருவழிச் சாலைப் போக்குவரத்தைக் கொண்டிருக்கும்.  அவற்றில் ஒரு குழாய்க்குள் ரயில்வே உள்கட்டமைப்பும் ஒருங்கிணைக்கப்படும்.

ரயில்கள் இயங்கும் நேரத்தில், அந்தக் குறிப்பிட்ட குழாய்க்குள் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக அனுமதிக்கப்படாது. அவசரகாலப் பாதுகாப்புப் பணிகளுக்காக, இந்த இரண்டு பிரதான குழாய்களும் ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும்.

பிரம்மபுத்திரா நதி உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நதிகளில் ஒன்றாகும். பருவமழைக் காலங்களில் இந்த நதி பெருக்கெடுத்து ஓடி, தனது பாதையையே மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. மேலும், அஸ்ஸாம் பகுதி நிலநடுக்க அபாயம் அதிகம் கொண்ட மண்டலத்தில் அமைந்துள்ளது.  எனவே, கடுமையான நிலநடுக்கங்கள், நீர் அழுத்தம் மற்றும் கடுமையான வெள்ளப் பெருக்கு ஆகியவற்றைத் தாங்கும் வகையில், அதிநவீன சர்வதேசத் தரத்துடன் இந்தச் சுரங்கப்பாதை வடிவமைக்கப்படவுள்ளது.

இத்திட்டம் அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதாரத்தை முழுமையாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லையில் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை வேகப்படுத்தவும், பேரிடர் காலங்களில் விரைந்து செயல்படவும் இது இந்திய ராணுவத்திற்குப் பெரும் பலமாக அமையும். நுமலிகர் தொழில்துறை பகுதி, இதர விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு நீர்வழி முனையங்களை இது எளிதில் இணைக்கும்.

இத்திட்டத்தின் கட்டுமானக் காலத்தில் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 80 லட்சம் மனித-நாட்கள் வேலைவாய்ப்பு உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில், இந்த உருமாற்றத் திட்டம் வடகிழக்கு இந்தியாவின் இணைப்புத் திறனை மேம்படுத்தி, தளவாடச் செலவுகளைக் குறைப்பதுடன், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் வளர்ச்சியைப் பலமடங்கு துரிதப்படுத்தும் என்று பாராட்டியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top