இணையப் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில், ஆன்லைன் மூலமான பண மோசடிகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இத்தகைய டிஜிட்டல் குற்றங்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், இழந்த பணத்தை விரைவாக மீட்கவும் தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை ஒரு புதிய அதிரடி முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. அதுதான் ‘இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ திட்டம்.
பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்ட விதிகளின்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.
பொதுவாக ஒரு குற்றம் நடந்தால், அந்தப் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்றுதான் புகார் அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், அவசர காலங்களில் எல்லை வரம்புகளைப் பார்க்காமல், எந்தவொரு காவல் நிலையத்திலும் உடனடியாகப் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையே ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ ஆகும். இதில் குற்றப் பதிவு எண் வழங்கப்படாமல் ‘0’ (பூஜ்ஜியம்) எனப் குறிப்பிடப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்படும்.
இதன் அடுத்தகட்ட டிஜிட்டல் வடிவமே ‘இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர்’. ஆன்லைன் நிதி மோசடி புகார்களை இணையவழியாகவும், தொலைபேசி வழியாகவும் பெற்று உடனடியாக எல்லையற்ற முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்ய இந்த மின்னணு முறை வழிவகை செய்கிறது.
இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர்: செயல்பாட்டு முறை
சைபர் நிதி மோசடியால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கான செயல்பாட்டு நடைமுறைகளைத் தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை விரிவாக வகுத்துள்ளது.
ஆன்லைன் மூலமாகப் பணத்தை இழந்த நபர் உடனடியாக தேசிய சைபர் குற்றப்பிரிவு இலவச தொலைப்பேசி எண்ணான 1930-க்கு அழைத்துத் தனது புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.
1930 எண் மூலம் பெறப்படும் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான நிதி மோசடி புகார்கள், உடனடியாக குற்றப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு நெட்வொர்க் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு, ‘இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ ஆகப் பதிவு செய்யப்படுகிறது.
புகார் பதிவான உடனே, மோசடி செய்பவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் முடக்கப்பட்டு, சான்றிதழ்கள் கையகப்படுத்தப்படும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் பணம் பாதுகாக்கப்படுகிறது.
இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவானதும், பாதிக்கப்பட்ட நபரின் கைப்பேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதைப் பெற்ற 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட சைபர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகாரை உறுதிப்படுத்த வேண்டும்.
அதன் பின்னரே அது வழக்கமான குற்றப்பதிவு எண் கொண்ட எஃப்.ஐ.ஆர் ஆக மாற்றப்பட்டு முழுமையான விசாரணை தொடங்கும்.
இத்திட்டத்தின் முக்கிய நன்மைகள்
மீண்டும் மீண்டும் புகார் அளிக்கத் தேவையில்லை: இந்த மின்னணு ஒருங்கிணைப்பு முறையால் பொதுமக்கள் ஒரே புகாரைப் பலமுறை வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யும் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது.
விரைவான பண மீட்பு: ஆன்லைன் மோசடிகளில் ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் ஆரம்பக் கட்ட சில மணிநேரங்கள் மிக முக்கியமானவை. இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் மூலம் மோசடிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படுவதால், இழந்த பணம் பாதிக்கப்பட்டவர்களிடம் விரைவாகத் திரும்ப ஒப்படைக்கப்படும்.
எல்லைப் பிரச்னைகள் இல்லை: பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டப் பிரிவு 173-இன் படி, இணையம் வழியே பெறப்படும் புகார்களுக்கு எல்லை வரம்புகளைப் பொருட்படுத்தாமல் இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. இதனால் “எங்கள் எல்லைக்கு உட்பட்டது அல்ல” என்று காவல்துறை விசாரணையைத் தாமதப்படுத்த முடியாது.
தொழில்நுட்பம் வளர வளரக் குற்றங்களின் தன்மையும் மாறுகிறது. அதற்கு இணையாகத் தமிழ்நாடு காவல்துறையும் ‘இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ போன்ற டிஜிட்டல் நடைமுறைகளைப் புகுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆன்லைன் நிதி மோசடிகளில் சிக்கினால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு இப்புதிய திட்டத்தின் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதே பணத்தை மீட்பதற்கான சிறந்த வழியாகும்.

