Close
மே 20, 2024 1:38 மணி

புதுக்கோட்டை கம்பன் பெருவிழா பரதநாட்டியம்- பட்டிமன்றத்துடன் நிறைவு…

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கம்பன்பெருவிழாவின் நிறைவு விழாவில் பேசிய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் முகமது ரேலா.

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில்  ஜூலை 14 ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை 48 -ஆம் ஆண்டு கம்பன் விழா 10 நாட்கள் நடைபெற்றது.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் (டவுன்ஹால்)  (ஜூலை 23)  மாலையில்  மாலை  5.30 மணிக்கு நடைபெற்ற கம்பன் பெருவிழாவின்  நிறைவு விழாவுக்கு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமை வகித்தார்.   

சிறப்பு விருந்தினராக சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவ மனை கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா  பங்கேற்று பேசியதாவது:

கம்பர், அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்பதை அடிப்படையாக வைத்துத்தான் கம்ப ராமாயணத்தை எழுதினார். ராமாயணத்தில் எந்த இடத்திலும் ராவணனை வெறுப்புடன் காட்டியதில்லை. மூக்கறுபட்டு வந்த சூர்ப்பனகையிடம் நீ என்ன தவறு செய்தாய் என்றுதான் ராவணன் கேட்பார்.
அத்தனை உயர்வான குணங்களை ராவணனிடம் பதிவு செய்திருப்பார் கம்பர். ஆனால், ராவணன் தோற்றதற்கான காரணங்களில் ஒன்று அவனது அகங்காரம், இன்னொன்று பிறன்மனை நோக்கும் குணம்.
ராவணனிடம் சீதையின் அழகை அப்படி வர்ணித்து சூர்ப்பனகை. ராவணனின் மனதைக் கெடுத்துவிடுவாள். எவரையும் அவரது சம்மதமின்றித் தொட்டால் தலை சிதறிவிடும் என்ற வரத்தைப் பெற்றிருந்தான் ராவணன்.
எத்தனைப் பெரிய வரத்தைப் பெற்றவர்களாயினும் தவறு செய்தால் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் கம்ப ராமாயணத்தின் அடிப்படை யான கருத்தாக கம்பர் படைத்திருக்கிறார்.திருவள்ளுவர், கம்பர், பாரதியார் என அனைவருமே உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்குமான சகோதரத்துவத்தை வலியுறுத்தி யவர்கள் என்றார் மருத்துவர் முகமது ரேலா.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை கம்பன் பெருவிழா நிறைவு விழாவி பங்கேற்ற பார்வையாளர் கள்
விழாவுக்கு, ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிர்வாகி தி. அருண் வாழ்த்துரை வழங்கினார். மும்பை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், டாக்டர் ஜி. மாரிமுத்து, எம்ஆர்எம். கல்வி நிறுவன நிர்வாகி மீனாள் முருகப்பன்,  கீரனூர் வர்த்தகர் கழக தலைவர் வீராச்சாமி, கறம்பக்குடி வியாபாரிகள் சங்கத்தலைவர் சாந்தீபமூர்த்தி, வர்த்தகர் சங்கத்தலைவர் டி. ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இதையடுத்து,  கோவை  கலைக்கோவில் நாட்டியப்பள்ளியின் பாலாம்பிகா  குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக விழாக்குழு உறுப்பினர் எஸ். ரவிச்சந்திரன் வரவேற்றார். யோகா பாண்டியன் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வுக்கு இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா ஆர். தொண்டைமான் தலைமை வகித்தார்.
தொடர்ந்து, பேச்சாளர் பாரதி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இன்றைய இளைஞர்களுக்கு ஆதர்சம் இராமன் என்னும் தலைவனா.. அனுமன் என்னும் தொண்டனா எனும் தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை கம்பன் பெருவிழா பட்டமன்றத்தில் பேசுகிறார், பாரதிபாஸ்கர்
இதில், கோவை குரு ஞானாம்பிகா, ராஜபாளையம் ஆர். ராஜ்குமார், கவிதா ஜவஹர், மதுரை ரேவதி சுப்புலட்சுமி, குமரி க. கருணாநிதி, புதுக்கோட்டை பேச்சாளர் ச. பாரதி ஆகியோரும் இதில் பங்கேற்றுப் பேசினர்.
முன்னதாக, துணைத் தலைவர் அருண்சின்னப்பா வரவேற்றார். இணைச் செயலர் ரா. கருணாகரன் நன்றி கூறினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கம்பன் கழகத்தின் தலைவர் எஸ். ராமச்சந்திரன், செயலர் ரா. சம்பத்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top