Close
மே 10, 2024 11:44 காலை

கவிதைப் பக்கம்… சிரிப்பு..

புதுக்கோட்டை

கவிதைப்பக்கம்- டாக்டர் மு.பெரியசாமி

சிரிப்பு..

மலர்களின் சிரிப்பு
வாசம்
மரங்களின் சிரிப்பு
காற்று
காலையின் சிரிப்பு
ஒளி
கடவுளின் சிரிப்பு
மௌன மொழி

செயற்கை யில்லாமல்
சேதாரம் இல்லாமல்
இறைவன் படைப்பில்
இன்றுவரை
இயல்புடன் தொடர்கிறது
மழலையின் சிரிப்பு

அன்பில் பிறந்து
அகத்தில் நுழைந்து
சங்கீத எண்ணங்களை
விதைக்க
சந்தோஷக் கதவுகளை
திறக்கும் திறவுகோல்
சிரிப்பு

துயர் தரும் கோபத்தை
அகற்றி
துன்பத்தில் துவளாமல்
மனதை நிறுத்தி
ஆனந்தம் பொங்கிட
ஆயுளை நீட்டிக்கும்
அற்புத மூலிகை
சிரிப்பு

முன்னூறு தசைகளை
இயக்கி
முகத்தில்
மூவாயிரம் மலர்களை
அடுக்கி
மூளையின் செயல்களை
முடுக்கி
மொத்த உடம்பையும்
குலுக்கி
முத்தமிட்டு செல்கிறது
நம் சிரிப்பு

நாடுகளை கடந்து
நாகரிகம் கடந்து
மதங்களை கடந்து
மக்களை கடந்து
உள்ளம் மகிழும்போதும்
உயர்வினை நல்கும்போதும்
உலகம் பேசும்
ஒரே மொழி
சிரிப்பு…
வாழ்க்கைக்கு அதுவே
என்றும் சிறப்பு!!

#மரு.மு.பெரியசாமி #புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top