அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டபை தொகுதிகள் உள்ளன. 6 தொகுதிகளிலும் மொத்தம் 1,629 வாக்குச் சாவடிகள் உள்ளன.
வழக்கமாக பொதுதுத்தேர்தல் நடைபெறும்போது 6 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணுவதற்காக, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்படும்.
பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி கருதி, 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலின்போது, நாமக்கல் மாவட்ட அலுவலகம் அருகில் உள்ள அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் முதல் முறையாக வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி அரசு சட்டக்கல்லூரிக்கு நேரில் சென்று வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள், வாக்கு எண்ணும் பணியினை பார்வையிடுவதற்கான வசதிகள், அவர்கள் வந்து செல்வதற்கான பாதைகள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான மேசைகள், நாற்காலிகள், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேவையான குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ஊடகப்பிரிவினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க ஏதுவாக ஊடக மையம் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான இட வசதி அகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, டிஆர்ஓ சரவணன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.




