நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள் அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் மூலம் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் சம்மந்தமான துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா முன்னலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்துப் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் 72 மணி நேரத்திற்குள் அமல்படுத்தப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், அரசு வளாகம், கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும். பொது வளாகம், கட்டிடங்கள், பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், பாலகங்கள், மின்கம்பங்கள் உள்ளாட்சிக்குட்பட்ட கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும்.
தனியார் வளாகம், கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணிநேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளாது.
அதன்படி, அனைத்து அரசு வளாகம், கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் செலவில் அழிக்க, அகற்ற வேண்டும்.
அவர்கள் அகற்ற தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரிடம் தொகையினை வசூல் செய்து கொண்டு சம்பந்தப்பட்ட துறையினர் அழிக்க வேண்டும். தனியார் வளாகம், கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்திற்குள் அழிக்க, அகற்றப்பட வேண்டும்.
எம்எல்ஏ அலுவலகங்களை பூட்டி சீலிட்டு சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலங்களிலும், கூட்ட அரங்குகளிலும் பொருத்தப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை மூடி மறைக்க வேண்டும் அல்லது அகற்ற வேண்டும்.
சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்து சம்பந்தப்பட்ட துறையினர், தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து அலுவலர்களும் தேர்தல் நடத்தை விதிகளை, தேர்தல் கமிஷனின் உரிய காலக்கெடுவிற்குள் பின்பற்றி நடக்க வேண்டும் என கூறினார்.
அனைத்து உதவி தேர்தல் அலுவலர்கள், மாநகராட்சி கமிஷனர், பிடிஓக்கள், நகராட்சி கமிஷனர்கள், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் சம்மந்தமான துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.




