ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மகிழ்ச்சி, தற்போது பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.
போட்டி முடிந்த பிறகு அர்ஜென்டினா வீரர்கள் மைதானத்தில் அரசியல் ரீதியான பேனரைக் காட்டி கொண்டாடியதால், அந்த அணிக்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா) தடை அல்லது அபராதம் விதிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
சர்ச்சையை ஏற்படுத்திய அந்த பேனர்!
அட்லாண்டாவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது. ஆட்டம் முடிந்ததும், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர டிஃபெண்டர்களான ஜியோவானி லோ செல்சோ, நிகோலஸ் ஓட்டமெண்டி மற்றும் லிசாண்ட்ரோ மார்டினெஸ் ஆகியோர் மைதானத்தில் ஒரு பெரிய பேனரை ஏந்தி தங்களது வெற்றியைக் கொண்டாடினர்.
அந்த பேனரில் ஸ்பானிஷ் மொழியில் “Las Malvinas Son Argentinas” (பால்க்லாந்து தீவுகள் அர்ஜென்டினாவுக்கே சொந்தம்) என்று எழுதப்பட்டிருந்தது.
பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள பால்க்லாந்து தீவை அர்ஜென்டினா மக்கள் ‘மால்வினாஸ்’ என்று அழைக்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த பேனரைக் காட்டியது இங்கிலாந்து கால்பந்து வட்டாரத்திலும் ரசிகர்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பால்க்லாந்து தீவுகளின் இறையாண்மை தொடர்பாக பிரிட்டனுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே நெடுங்காலமாக பகை நிலவி வருகிறது. 1982-ல் இந்த தீவுக்காக இரு நாடுகளுக்கும் இடையே 74 நாட்கள் கடுமையான போர் நடைபெற்றது. இதில் 649 அர்ஜென்டினா வீரர்களும், 255 பிரிட்டன் வீரர்களும் உயிரிழந்தனர்.
இறுதியில் பிரிட்டன் தீவைக் கைப்பற்றிய போதிலும், அர்ஜென்டினா இன்றும் அந்த தீவு தங்களுக்குத்தான் சொந்தம் என்று உரிமை கோரி வருகிறது. இதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகள் எப்போதுமே வெறும் கால்பந்தாகத் தாண்டியும் பெரும் போராகவே பார்க்கப்படுகிறது.
ஃபிஃபா விதிகள் கூறுவது என்ன?
ஃபிஃபா மற்றும் சர்வதேச கால்பந்து சங்க வாரியத்தின் விதிகளின்படி, போட்டி நடைபெறும் மைதானங்களுக்குள் அரசியல், மதம் அல்லது தனிநபர் சார்ந்த வாசகங்கள், சின்னங்கள் மற்றும் பேனர்களைக் காண்பிக்க வீரர்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ அனுமதி இல்லை.
போட்டி தொடங்குவதற்கு முன்பே, அர்ஜென்டினாவின் பாதுகாப்பு அமைச்சர் அலெஜான்ட்ரா மான்டியோலிவா, பால்க்லாந்து தொடர்பான கொடிகளையோ பேனர்களையோ ரசிகர்கள் மைதானத்திற்குள் கொண்டு வரக் கூடாது என்று ஃபிஃபா விதிகளைச் சுட்டிக்காட்டி தடை விதித்திருந்தார். ஆனால், ரசிகர்களைத் தாண்டி வீரர்களே மைதானத்திற்குள் இந்த பேனரைக் கொண்டு வந்து காட்டியது விதிகளின் கடுமையான மீறலாகும்.
இதற்கு முன்பாக 2014ஆம் ஆண்டு ஸ்லோவேனியாவுக்கு எதிரான ஒரு நட்பு ரீதியான போட்டியின் போதும் அர்ஜென்டினா வீரர்கள் இதே போன்ற பேனரைக் காட்டியதற்காக அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு ஃபிஃபா சுமார் 36,000 டாலர் அபராதம் விதித்தது.
தற்போது உலகக் கோப்பை போன்ற பிரம்மாண்ட மேடையில், அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்த விதிமீறல் நடந்துள்ளதால், ஃபிஃபா அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட வீரர்களுக்குப் பெரிய தொகையை அபராதமாக விதிக்கலாம் அல்லது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா விளையாடவிருக்கும் நிலையில், இந்த சர்ச்சை அந்த அணியின் கவனத்தை திசைதிருப்பும் விதமாக அமைந்துள்ளது.




