Close
மே 20, 2024 8:32 மணி

புத்தகம் அறிவோம்.. இனியது இனியது வாழ்க்கை

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்..

டாக்டர் என்.ஸ்ரீதரன் தேவக்கோட்டையில் பிறந்து தற்போது சென்னையில் வசிப்பவர். இந்தி மொழி அறிஞர். தென்னிந்தியாவிலேயே முதன் முதலில் இந்தியில் முனைவர் பட்டம் பெற்றவர்.

மேலூர் அரசுக் கல்லூரி, புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரியில் இந்திப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிறந்த மொழி பெயர்ப்பாளர். நேஷனல் புக் டிரஸ்டின் அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப் பாளர்.

வசந்த் மூன் இந்தியில் எழுதிய அம்பேத்கார் வாழ்க்கை வரலாற்றை தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார். நல்ல தமிழறிஞர். “பாரதியின் பராசக்தி” இவரின் முதல் நூல்.
வாழ்க வளமுடன், வாழ்வில் வசந்தம், ஞானோதயம், துன்பம் இனி இல்லை, வாழ்க்கை பண்புகள், போன்ற தன்னம்பிக்கை நூல்கள், ஒளிக்கு இட்டுச்செல்,ஒரு கண்ணாடி, ஒரு கல், ஒரு கல்யாணம் ஆகிய சிறுகதை தொகுப்புகள், பல மொழிபெயர்ப்பு நூல்கள், ஆங்கில தமிழ் அகாராதி என்று 50 க்கு மேற்பட்ட  நூல்களை எழுதியிருக்கிறார். காதுகேளாதவர்.

இனியது இனிய துவாழ்க்கை, ஸ்ரீதரனின் 12 -வது நூல். மன்னர் கல்லூரியில் பணியாற்றிய போது எழுதியது. இந்த நூல் Lord Avebury என்ற ஆங்கிலேயர் 1889ல் எழுதிய The use of Life என்ற ஆங்கில மூலநூலின் தமிழ் வடிவம். ஸ்ரீதரன் சொல்வதுபோல் இந்நூல் மொழி பெயர்ப்பு நூல் அல்ல. மூலநூல் ஆசிரியரின் முக்கியமான கருத்துகள் மட்டுமே விளக்குவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

அந்த விளக்கம் இன்றைய வாழ்க்கை நிலை, இந்திய வாழ்க்கை, தமிழர்களின் தேவைகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டே செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் தமிழ் எழுத்தாளர்களின் மேற்கோள்களே குறிப்பிடப் பட்டுள்ளன.

ஏன் பிறந்தாய் மகனே? பழகத் தெரியனும், நா நலம், நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு,உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே, ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை, பணமும் மன அமைதியும்,அறிவு அற்றம் காக்கும் கருவி,

சும்மோ வருமோ சுகம், பாரத சமுதாயம் வாழ்கவே,மதமும் மனிதனும்,கடவுள் வந்திருக்கிறார்,எல்லாம் இன்பமயம் என்று 13 தலைப்புகளில் இனிமையான வாழ்விற்கு வழி காட்டுகிறது இந்நூல்.

வாழ்க்கை முழுவதும் நாம் எதையாவது கற்றுக் கொண்டே தானிருக்கிறோம். பள்ளி -கல்லூரியில் – வீட்டில் – வெளியில் – அலுவலகத்தில், பத்திரிக்கைகள் நூல்களில் சொற்பொழிவு களில் நமக்கு கற்பிக்கப்படும் விஷயங்களும் , கற்கும் விஷயங்களும் ஏராளம்.

அந்த ஒன்று மட்டும் நாம் கற்பதும் இல்லை; நமக்குக் கற்பிக்கப்படுவதும் இல்லை. அதுதான் – எப்படி வாழ்வது என்ற அரிய பெரிய விஷயம். அந்த விஷயத்தை இந்த நூல் கற்றுத்தருகிறது என்கிறார் ஸ்ரீதரன். (பக்.1) கங்கைபுத்தக நிலையம், வெளியீடு. 044 – 24342810

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top