Close
மே 4, 2024 12:33 மணி

பட்டியலின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை

பட்டியலின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற கையெழுத்து இயக்கம்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தலித் உரிமைகளுக்கான போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பட்டியலின மக்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தலித் உரிமைகளுக்கான போராட்ட ஒருங்கிணைப்புக்குழு புதுக்கோட்டையில் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பொதுச் சொத்துக்களில் பட்டியலின மக்களுக்கு உரிய பங்கினைப் பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் அம்மக்க ளிடமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறையை அடியோடு ஒழிக்க வேண்டும். அரசு கொள்முதல், ஒப்பந்தங்கள், வணிகம் ஆகியவற்றில் பட்டியலின மக்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும்.

கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய ஒடுக்குமுறையைத் தடுத்து நிறுத்த வேண்டும். பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு மீட்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களிடம் கையெழுத்துப் பெற்று குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்பது என தலித் உரிமைகளுக்கான போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 2.5 லட்சம் பேரிடம் கையெழுத்துப் பெறுவது எனத் தீர்மானித்து திங்கள் கிழமையன்று புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அதன் தொடக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் சி.ஜீவானந்தம், எஸ்.பி.லோகநாதன், டி.சலோமி, க.சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை கையெழுத்தியக்கத்தை  தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விதொச மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர்,

விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, எஸ்.கே.எம். ஒருங்கிணைப் பாளர் மு.மாதவன், இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஜி.எஸ்.தனபதி மற்றும் நிர்வாகிகள்  த.அன்பழகன், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், சு.மதியகழன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top