மதுரை, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 54வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துத்துடன் விழா இனிதே துவங்கப்பட்டது.
கல்லூரி பஜனைக்குழு மாணவர்கள் கல்லூரி வாழ்த்து பாடலை பாடினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார்.
ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் பற்றி கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மனந்த உரையாற்றினர். அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதிஷ்பாபு, மேனாள் முதல்வர் முனைவர் ராமமூர்த்தி மேனாள் துணை முதல்வர்கள் முனைவர் இளங்கோ மற்றும் பேராசிரியர் ஜெயபாலன் மற்றும் மேனாள் வேதியல் துறை பேராசிரியர் செவ்வேள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவேகானந்த கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் கல்லூரி ஆண்டறிக்கையை வழங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதன்மையரும் விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவருமான முனைவர் ராம கணேஷ் கல்லூரி நாள் சிறப்புரை ஆற்றி சிறப்பித்தார்.
துறை சார்ந்த பாடப்பிரிவுகள், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல்வேறு சேவை சார்ந்த கல்லூரி குழுவில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
கல்லூரியின் தமிழ் துறை தலைவர் பொறுப்பில் உள்ள முனைவர் ராமர் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை வரலாற்று துறைத் தலைவர் பொறுப்பில் உள்ள திரு குமரேசன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.