Close
ஏப்ரல் 23, 2026 11:33 மணி

உசிலம்பட்டியில் ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகள் கைது..!

ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி:

பஞ்சாப்பில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உசிலம்பட்டியில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 25 பேரை இரயில்வே போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பஞ்சாப் காவல்துறை மற்றும் துணை இராணுவத்தினர் கைது செய்ததைக் கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு 3500 வழங்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை, திருப்பூர் மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 5 இடங்களில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி இரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுச் செயலாளர் நேதாஜி தலைமையிலான 25 விவசாயிகள் இரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தகவலறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை மாவட்ட இரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளர் காமாட்சி தலைமையிலான இரயில்வே போலீசார் மற்றம் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற 25 விவசாயிகளை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

மத்திய மற்றும் பஞ்சாப் அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி இரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினரை கைது செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top