கொல்லிமலையில் உள்ள, சேலூர் நாடு, குழிப்பட்டி முதல் எருமப்பட்டி வரை குதிரைப்பாதையை சீரமைத்து தார் சாலையாக மாற்றி, மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து, கொல்லிமலையைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், நாமக்கல் ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
கொல்லிமலை தாலுகா, சேலூர் நாடு, தின்னனூர் நாடு, தேவனூர் நாடு பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 15,000க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் இருந்து சமவெளி பகுதிக்கு செல்ல, 4 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. மாவட்ட தலைநகர் நாமக்கல் வருவதற்கு, 90 கி.மீ.,க்கு மேல் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
ஆபத்து, விபத்து, பிரசவம் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக மருத்துவமனைக்கு செல்லும்போது, வழியிலேயே உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.
விவசாயிகள், விவசாய விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டுவர நீண்டதூரம் நடந்து செல்லவேண்டியுள்ளது. இதனால், எங்களுக்கு மிகுந்த பொருள் மற்றும் நேர விரையம் ஏற்படுகிறது.
குறிப்பாக, சேலூர் நாடு மணப்பாறை சந்தையில், குதிரைப் பாதைக்கு வருவதற்கு, வெறும் 2 கி.மீ., தூரம் மட்டுமே உள்ளது. தற்போது, நீண்டதூரம் சுற்றிக்கொண்டு மணப்பாறை சந்தைக்கு வியாபாரிகள் வராததால், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சொற்ப விலைக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, அரப்பளீஸ்வரர் கோவில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மேற்படி குழிப்பட்டி குதிரை பாதையில் இருந்து வெறும் 7 கி.மீ., தூரம் மட்டுமே. சேலூர் நாடு, குழிப்பட்டி முதல், எருமப்பட்டி வழியாக, நாமக்கல் வருவதற்கு ஆங்கியேலர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த குதிரைப் பாதையை புதுப்பித்து தார் சாலையைõக மாற்றிப் பயன்படுத்துவதால், மாவட்ட தலைநகர் நாமக்கல் வருவதற்கு வெறும் 34 கி.மீ., தூரம் மட்டுமே ஆகும்.
இதனால், 46 கி.மீ., தூரம் பயணம் செய்வது மீதமாகும். இதன் மூலம் ஏற்படக்கூடிய பொருள் மற்றும் நேர விரயமும் சேமிக்கப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகள் மற்றும் மருத்துவம், பிரசவம், விவசாய பொருட்கள் கொண்டு செல்லவும், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் சென்று வரவும் இந்த வழி மிகவும் சிறந்ததாகும்.
கொல்லிமலை மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, குதிரைப் பாதையை, சாலையாக மாற்றும் மாற்றுப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




