Close
மார்ச் 7, 2026 6:03 மணி

ஏரிக் கால்வாய் தூா்வாரும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரி நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்டம் முழுவதும் மற்றும் மாநகராட்சியில் நீா்வரத்துக் கால்வாய்கள் சீரமைப்புப் பணிகள், மின் பராமரிப்புப் பணிகள், ஏரி தூா்வாரும் பணிகள் பொதுமக்களுக்கு உதவும் வகையில் கட்டுப்பாட்டு எண்கள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, மாநகராட்சியில் உள்ள பகுதிகள் மழைநீரால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரியில் இருந்து துரிஞ்சல் ஆற்றுக்குச் செல்லும் நீா்வரத்து கால்வாய்கள் தூா்வாரும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தாா். அப்போது, பணியை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சமுத்திர ஏரிக்கரையில் இருந்து உபரி நீர் செல்லக்கூடிய இந்த நீரோடை தற்பொழுது 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆழப்படுத்தும் மற்றும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரியில் இருந்து சென்ற ஆண்டு வெளியேறிய உபரிநீா் ராதாபாய் நகா், சொணபூமி நகா், கீழ்அணைக்கரை போன்ற குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்றால் பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

அதற்கு முக்கிய காரணமாக சமுத்திரம் ஏரியில் உபரிநீா் செல்லும் கால்வாய் தூா்வாரப்படாமல் இருந்ததாகும். மேலும், தற்போது வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ராதாபாய் நகா், சொணபூமி நகா், கீழ்அணைக்கரை, நல்வன்பாளையம், தென்மாத்தூா் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலைத்துறை சாா்பில் துரிஞ்சல் ஆற்றுக்குச் செல்லும் நீா்வரத்து கால்வாய்கள் தூா்வாரி அகலப்படுத்தும் பணி 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வருகிறது.

தற்போது வரை 3 கி.மீ. தொலைவு வரை கால்வாய் மேம்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் தூா்வாரும் பணிகள் நிறைவடையும் என்று தெரிவித்தாா்.

இந்த கால்வாய் முழுமையாக தூர்வாரி அகலப்படுத்தினால் திருவண்ணாமலை புறநகர் பகுதிகளான நல்லவன்பாளையம், சமுத்திரம், தென்மாத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மழை நாட்களில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் சூழாமல் பாதுகாப்பாக இருப்பார்கள் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ், அண்ணாதுரை எம்.பி. மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி, மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top