நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அலுவலகம் முன் தூய்மைப் பணியாளர்கள் 30 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 30 பேர், திடீரென மருத்துவமனைஅலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தூய்மைப்பணியாளர்கள் கூறியதாவது: கடந்த 24-ம் தேதி சரியாக பணிபுரியவில்லை என்ற காரணத்திற்காக எங்களை பணிக்கு அமர்த்திய தனியார் ஒப்பந்த நிறுவனம் 21 பேருக்கு கடந்த ஒரு வாரமாக பணி ஒதுக்கவில்லை.
இது குறித்து தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நாங்கள் முறையாக மேற்கொள்கிறோம். கூடுதல் பணிகளையும் நாங்கள் செய்கிறோம். ஆனால், பணிபுரியவில்லை என்ற பொய்யான காரணத்தைக் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
எங்களுக்கு பயோமெட்ரிக் அட்டண்டன்ஸ் கொடுக்கப்படும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும். எங்களுடன் சேர்ந்து மேலும் 9 பேர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்றனர்.




