Close
மார்ச் 7, 2026 1:25 மணி

சிப்காட் திட்டம் ரத்து செய்ய கோரி கால்நடைகளுடன் விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

வளையப்பட்டி அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் கால்நடைகளுடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்கள்.

நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆடு, மாடு கால்நடைகளுடன், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 882 ஏக்கர் பரப்பளவில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. ‘இத்திட்டத்தை அமைக்க கூடாது என, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள், சிப்காட்’ எதிர்ப்பு இயக்கத்தினர், விவசாய முன்னேற்ற கழகத்தினர் கடந்த ஒரு ஆண்டுகளாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜன., 2 முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுப்போவதாக ஏற்கனவே அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, என்.புதுப்பட்டி பஞ்சாயத்து கஸ்தூரிமலை அடிவாரத்தில், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர், ஆடு, மாடுகளுடன், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.

விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், ரவீந்திரன், மோகனூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், வளையப்பட்டி முன்னாள் திமுக பஞ்சாயத்து தலைவர் வீரமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் போராட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது, பெண் விவசாயி ஒருவர், எங்கள் விளை நிலங்களையும், கால்நடைகளையும் காப்பாற்ற வேண்டும் என, அவரது காலில் விழுந்து கதறி அழுதார். நிச்சயமாக, 2 மாதம் காத்திருங்கள். அதற்கு பின் அ.தி.மு.க., ஆட்சி அமையும். அப்போது, இந்த திட்டத்தை ரத்து செய்துவிடுகிறோம் என, உறுதி அளித்தார்.

இது குறித்து, வளையப்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தி.மு.க., தலைவர் வீரமலை கூறியதாவது:
நான், வளையப்பட்டி பஞ்சாயத்தில், 10 ஆண்டுகளாக தலைவராக பணியாற்றி உள்ளேன். சிப்காட் திட்டம் அரசு கொண்டுவருவதற்கு எண்ணம் இல்லை. தமிழக அரசு, தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழங்கிய 66 ஏக்கர் நிலத்தை யாரும் வாங்காததால், தற்போதைய அமைச்சர் ஏக்கருக்கு ரூ. 40 லட்சம் வீதம் பெற வேண்டும் என்பதற்காக, மாவட்ட நிர்வாகம் மூலம் சிப்காட் திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இங்குள்ள விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிப்காட் அமைந்தால், இப்பகுதி முழுவதும் நிலத்தடிநீர் பாழ்பட்டுவிடும். காமராஜர் காலத்தில் வழங்கப்பட்ட விவசாய நிலத்தை, தி.மு.க., அரசு சிப்காட் திட்டத்திற்காக பறிக்க முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top