Close
மார்ச் 7, 2026 1:42 மணி

பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோழிப் பண்ணையாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை

மோகனூர் அருகே பரளி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றை, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கேரளாவில் தாக்கம் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் நோய், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு பரவாத வகையில், பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, பரளி ஊராட்சியில் உள்ள கோழிப்பண்ணைகளை, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:

அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய், அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் குறிப்பாக நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கோழிப்பண்ணைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். பண்ணையின் நுழைவு வாயிலில் தொட்டி அமைத்து, அதில் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி கலந்த கலவையை வைக்க வேண்டும். பண்ணைக்குள் நுழையும்போதும், வெளியேறும்போதும் அனைத்து நபர்களுக்கும், வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

பறவை காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ள அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கோழிகள், கோழி முட்டை அட்டைகள் மற்றும் கோழிப்பண்ணை சார்ந்த எந்த பொருட்களையும் வாங்கி வரக்கூடாது.

அனைத்து கோழிப்பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை (பயோ செக்யூரிட்டி) முறையாக கடைபிடிக்க வேண்டும்.

மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளை கண்காணித்திட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 45 அதிவிரைவுப்படை அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களைக் கொண்ட இந்த குழுவினர் பண்ணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்வாளர்கள்.

வழக்கத்திற்கு மாறாக பண்ணைகளில் அசாதாரண இறப்பு ஏற்படின் பண்ணையாளர்கள் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, பறவை காய்ச்சல் தொற்றில் இருந்து நாமக்கல் மாவட்டத்தை பாதுகாத்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆய்வின்போது, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பழனிவேல் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top