Close
மார்ச் 7, 2026 9:34 காலை

முதலமைச்சர் விளையாட்டு விழாவை தொடங்கி வைத்த அமைச்சர், எம்.பி.

நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார், எம்.பி., ஆகியோர் பரிசு வழங்கினார்கள்.

நாமக்கல்லில் நடைபெற்ற முதலமைச்சர் விளையாட்டு விழாவை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார், எம்.பி., ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இது நம்ம ஆட்டம் என்ற பெயரில், முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா துவங்கியது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் விளையாட்டுப்போட்டிகளை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு துணை முதலமைச்சர் விளையாட்டு துறையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி வீரர்கள், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்-மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் வகையில், மாவட்ட மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா, இது நம்ம ஆட்டம் 2026 என்ற பெயரில் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில், 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடையவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு, இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுகிறது.

மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு, விளையாட்டுத்துறையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top