Close
மார்ச் 13, 2026 9:42 மணி

வீடுகளுக்கு சமையல் கேஸ் தட்டுப்பாடு இல்லை பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை: நாமக்கல் கலெக்டர் தகவல்

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில், சமையல் கேஸ் விநியோகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து எண்ணெய் கம்பெனி மேலாளர்கள் மற்றும் சமையல் கேஸ் விநியோகஸ்தர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கேஸ் சிலிண்டர்கள் இருப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் செய்துள்ள முன்பதிவு குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் இண்டேன், பாரத் கேஸ் மற்றும் எச்பிசி கேஸ் நிறுவனங்களின் 46 கேஸ் விநியோகஸ்தர்கள் மூலம் 5,95,569 வீடுகளுக்கு சமையல் கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை வீட்டுஉபயோக கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்யப்பட்டு வருதாக கேஸ் கம்பெனியினர் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லை. மேலும் கேஸ் சிலிண்டர் விநியோகத்தை கண்காணிக்க தாலுகா அளவில் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சமையல் கேஸ் விநியோகஸ்தர்கள், தங்களிடம் உள்ள கேஸ் சிலிண்டர்கள் ஸ்டாக் மற்றும் விநியோகம் தொடர்பான விவரங்களை தினசரி தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்கள், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், அங்கன்வாடிகள், சத்துணவுத்திட்டம், ஆஸ்பத்திரிகள் மற்றும் பள்ளி, கல்லூரி ஹாஸ்டல்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை செல்போன் எண். 94450 45612 மூலம் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top