Close
மே 25, 2026 7:55 மணி

அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய தவெக எம்எல்ஏ அபிஷேக்

திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் தொகுதியில் உள்ள  சேத்துப்பட்டு கடந்த 2011- ம் ஆண்டு தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது.

போளூர், ஆரணி, வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 76 கிராமங்கள் இதனுடன் இணைக்கப்பட்டன. தற்போது இப்பகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு செயல்பட்டு வந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், அதற்கேற்றபோதிய இடவசதியோ, படுக்கை வசதிகளோ அல்லது அடிப்படை வசதிகளோ இங்கு இல்லை.

புதிய தாலுகா மருத்துவமனை கட்டுவதற்காக நெடுங்குணம் பகுதியில் 7 ஏக்கர் அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தும், இதுவரை அதற்குரிய பட்டா வழங்கப்படாததே இந்தத் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தவெக எம்எல்ஏ அபிஷேக் ஆய்வு

இந்நிலையில் , தச்சாம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய பணியாளர்கள் இல்லை என்ற புகாரின் பேரில், போளூர் தொகுதி தவெக எம்எல்ஏ அபிஷேக் அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

அதனை தொடர்ந்து, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்குள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவ அலுவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லை. எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற அடிப்படை வசதிகளும் குறைவாகவே உள்ளன. நெடுங்குணத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலத்திற்கு உடனே பட்டா வழங்கி, புதிய கட்டட பணிகளை உடனடியாக தொடங்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.

மருத்துவமனை அலுவலர்களும் புதிய கட்டட அனுமதி மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து எம்எல்ஏவிடம் முறையிட்டனர். கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர் மற்றும் பணியாளர் பணியிடங்களை நிரப்பவும், புதிய கட்டட பணிகள் தொய்வின்றி நடக்க சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது தவெக நகர செயலாளர் பிரவீன்குமார் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top