Close
மே 31, 2026 11:03 மணி

திருவண்ணாமலையில் விதிமுறைகளை காற்றில் பறக்க விடும் ஆட்டோ ஓட்டுநர்கள்

திருவண்ணாமலை போன்ற ஆன்மீகத் தலங்களில் பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால், ஆட்டோக்களின் எண்ணிக்கை மற்றும் ஒழுங்கற்ற நிறுத்தங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

வைகாசி மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

வைகாசி மாத பெளா்ணமி வருகிற வைகாசி பௌர்ணமி 30-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 12.50 மணிக்கு தொடங்கி 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.41 மணிக்கு நிறைவடைகிறது என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

சனிக்கிழமை காலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை வரை விடிய, விடிய பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றனர். சமீப காலமாக ஆந்திராவில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருவதால் மேலும் நெரிசல் அதிகரித்து வருகிறது.

விதிமுறைகளை காற்றில் பறக்க விடும் ஆட்டோ ஓட்டுநர்கள்

மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் ஆட்டோ ஓட்டுனருக்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட ஆட்டோக்கள் மட்டுமே பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் நகருக்குள் இயக்க அனுமதித்துள்ளனர்.

சன்னதி தெரு வழியாக பக்தர்களை ஏற்றிக்கொண்டு உள்ளே வரக்கூடிய ஷேர் ஆட்டோக்கள் அதே இடத்தில் நிறுத்தி மீண்டும் சாலை விதிகளை மதிக்காமல் சன்னதி தெரு வழியாகவே பக்தர்களை தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதால் ஒவ்வொரு பௌர்ணமி நாட்களிலும் சன்னதி தெரு முழுவதும் பக்தர்கள் செல்ல முடியாத அளவிற்கு நீண்ட போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

போக்குவரத்து போலீசார் என எத்தனை போலீஸ் வந்தாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதிக்காமல், ஒரு ஆட்டோக்களில் 15 முதல் 20 பக்தர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக புறநகர், மாநகராட்சி பகுதிகளில் செல்வதாலும் நடந்து செல்லக்கூடிய பக்தர்கள் மிகுந்த அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

திருவண்ணாமலையில் முக்கிய சாலைகளான சன்னதி தெரு, குயமட தெரு, சென்னப்பர் தெரு, செட்டி தெரு உள்ளிட்ட தெருக்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் பக்தர்களை ஆங்காங்கே இறக்கிவிட்டு ஏற்றிச் செல்வதால் அப்பகுதிகளிலும் கடும் போக்குவரத்து ஏற்படுகிறது.

மேலும் அந்த குறுகிய தெருக்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் மிக வேகமாக செல்வதால் அப்பகுதிகளில் யாரும் நடந்து செல்லவே முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் ஆட்டோக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர். பௌர்ணமி நாளில் சன்னதி தெரு மட்டுமின்றி அனைத்து வீதிகளையும் ஆட்டோக்கள் ஆக்கிரமித்து கொள்கின்றன.

வீட்டில் இருப்பவர்கள் கூட வெளியே வர முடியாது. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்,  தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை முறைப்படுத்த காவல்துறையினர் இல்லை.  ஆட்டோக்களுக்கு கடிவாளம் போட காவல்துறையினர் முன்வர வேண்டும் என்றனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களில் புறவழிச் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் குழுக்கள் அமைத்து ஆட்டோ ஓட்டுநர்களை கண்காணிக்க வேண்டும் சாலை விதிகளை மதிக்காத ஆட்டோக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆன்மீக பக்தர்கள் திருவண்ணாமலை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

தற்போது தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்கும் தொகையை பக்தர்கள் கேட்டவுடன்  மயங்கி விழாத குறை தான். இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிப்பதற்கு ஒருவருக்கு ரூபாய் 200க்கு மேல் கேட்பதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்துனர்.

குறிப்பிட்ட இடங்களில் இருந்து தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top