நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்வதற்கு, கோஸ்டல் ஜங்ஷனில் இருந்து ஏறும் பயணிகளிடம் அரசு பேருந்தை விட தனியார் பேருந்துகளில் ரூ. 10 அதிகமாக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நா
மக்கல்லில் இருந்து, ஈரோட்டிற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாமக்கல் முதலைப்பட்டியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு முன், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டது. அப்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஒரே கட்டணமாக வசூல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 2024ம் ஆண்டு அக். 10ம் தேதி, புது பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது. அதையடுத்து, நாமக்கல் புது பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், திருச்செங்கோடு, ஈரோட்டில் இருந்து நாமக்கல் வரும் அனைத்து பேருந்துகளும், நல்லிபாளையம் கோஸ்டல் ஜங்ஷன் அருகில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.
நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் பயணிகள், நல்லிபாளையம் கோஸ்டல் ஜங்ஷனில் நின்று அவ்வழியாக திருச்செங்கோடு, ஈரோடு செல்லும் பேருந்துகளில் சென்று வருகின்றனர். அதற்காக, அரசு பேருந்துகளில் கோஸ்டல் ஜங்ஷன் ஒரு ஸ்டேஜாக கணக்கிடப்பட்டு திருச்செங்கோட்டிற்கு ரூ. 20 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
தனியார் பேருந்தில் கோஸ்டல் ஜங்ஷன் ஸ்டேஜ் இல்லை எனக்கூறி நாமக்கல்லில் இருந்து, திருச்செங்கோட்டிற்கும், திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல்லிற்கும், ஒரே கட்டணமாக, ரூ. 30 டிக்கட் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
இது குறித்து, தனியார் பேருந்து நடத்துநர்களிடம் கேட்டால், ‘எங்களுக்கு கோஸ்டல் ஸ்டேஜ் இல்லை; ஒரே கட்டணம்தான் வசூலிப்போம் என கராறாக கூறுகின்றனர். தனியார் பேருந்து நிர்வாகத்தினரின் செயலால், கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு பேருந்துகளைப் போல், திருச்செங்கோடு ரோட்டில் கோஸ்டல் ஜங்ஷனை தனி ஸ்டேஜாக நிரணயித்து கட்டணத்தை குறைத்து வசூலிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்




