திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிகல்வித்துறை செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ள பள்ளிகள் குறித்தும்,தேர்வில் அதிக தோல்வியடைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகள் குறித்தும், பள்ளிகளின் கட்டமைப்பு குறித்தும், உயர்கல்வி சேர்க்கை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தோல்விபெறும் மாணவர்களை தனி கவனம் செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்திட சிறப்பு வகுப்பு அமைத்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு
பயிற்றுவிக்க வேண்டும் என்றும், உயர்கல்வியின் அவசியம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது
பள்ளிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவற்றை பராமரிக்க வேண்டும் என்றும், மேல்நிலை நீர்த்தொட்டிகளை தூய்மைப்படுத்திட வேண்டும் என்றும், கடைசியாக தூய்மைப்படுத்தப்பட்ட நாள் மற்றும் தூய்மை படுத்த வேண்டிய நாட்களை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வளாக கட்டிடங்களையும், வகுப்பறைகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும், சமையலறையும், சமையல் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் பாத்திரங்களையும் சுகாதாரமாக வைத்திருக்கவேண்டும், கழிவறைகள் தூய்மை படுத்தப்பட்டு தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்
மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளையும் பள்ளிக்கல்வித்துறை, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் மின் வாரியத்துறையுடன் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் முறையாக செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




