Close
ஆகஸ்ட் 18, 2026 6:48 மணி

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த கோரியும், தீவணம் மற்றும் கறவை மாடு வளர்ப்போர்களுக்கு 50% மானியம் வழங்க வலியுறுத்தி கறவை மாடுகளுடன், பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் வெண்மணிச் சந்திரன் கூறியதாவது: பால் விலை உயர்வுக்காக கடந்த 5 ஆம் தேதியிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக கூட்டுறவு வங்கிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.

லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த வேண்டும், ஊக்க தொகையாக லிட்டருக்கு 3 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது மேலும் 7 ரூபாய் உயர்த்தி லிட்டருக்கு 10 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் எனவும், பால் விலை 35 ரூபாய் என்பதை 10 ரூபாய் உயர்த்தி 45 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.

கேரளாவில் கூட 45 முதல் 43 ரூபாய் வழங்கப்படுகிறது., அதே போல கர்நாடகவிலும் 45 ரூபாய் வரை வழங்குகின்றனர். இதனால் தமிழகத்தின் பால் பக்கத்து மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது., தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் பற்றாக்குறையாக மாறுகிறது, மக்களுக்கும் போதுமான பால் வழங்க முடியாத நிலை நீடிக்கிறது.

ஆவினில், அதிமுக ஆட்சியின் போது தினசரி 35 லட்சம் லிட்டர் உற்பத்தியாக இருந்தது, கொரோனா காலத்தில் கூட 45 லட்சம் லிட்டராக உயர்ந்தது., திமுக ஆட்சி வந்த 6 மாதங்களில் 15 லிட்டர் குறைந்து 25 லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது வரை விலை உயர்வு இல்லாத சூழலால் 25 லட்சம் லிட்டரிலேயே தொடர்கிறது.

தற்போது தவெக அரசு மாறியவுடன் விலையை உயர்த்துவார்கள், உற்பத்தி கூடும் என எண்ணும் போது இவர்களும் இன்று நாளை என சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே தவிர பால் விலையை உயர்த்தவில்லை.

வழக்கம் போல கேரளாவிற்கும், கர்நாடகாவிற்கும் மணல் திருட்டு போல பால் திருடப்படுகிறது., தமிழக மக்களுக்கு அண்டை மாநிலத்தினர் லிட்டருக்கு 25 ரூபாய் சேர்த்து விற்கின்றனர்., அதையும் மக்கள் 68 ரூபாய் என வாங்கி குடிக்கின்றனர். ஆவினில் பால் விலை கூடினால் மட்டுமே விவசாயிகளுக்கான உற்பத்தி விலையும் கூடும்.

தனியாரின் பால் விலை கூடினால் விவசாயிகளுக்கான பால் விலை கூடாது, ஆவின் என்கிற பொதுத்துறை நிறுவனம் மூலம் விலையை உயர்த்து பால் கொள்முதல் செய்ய வேண்டும், கடந்த ஐந்து ஆண்டுகளாக பால் விலை உயரவே இல்லை., பால் கொள்முதல் விலையை 10 ரூபாய் உயர்த்த கோரி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறோம்.

வரும் 30 ஆம் தேதிக்குள் பால் விலையை உயர்த்தவில்லை எனில் பால் நிறுத்த போராட்டம், மறியல் போராட்டம் என தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம் என  கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top