Close
ஆகஸ்ட் 18, 2026 6:45 மணி

உயர்கல்வியில் சேர முடியாத மாணவர்கள் சேர்க்கை பெற டோல் ஃப்ரீ எண்: நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு

நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய உயர்கல்வி சேர்க்கை மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பேசியதாவது:

2025-2026 ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயின்று இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கான இம்முகாமில் நாமக்கல், கொல்லிமலை, மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், மற்றும் கபிலர்மலை ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 68 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அனைவருக்கும் கல்லூரிகளில் உயர்கல்வியில் சேர்க்கை பெறவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் கல்வி உதவித்ததொகை மற்றும் கல்விக் கடன் உதவி பெறவும் தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்படும்.

இந்த வாய்ப்பை மாணவ மணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் நன்றாக படித்து, அதன் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். அப்பொழுது தான் இந்த சமூகத்திலும், வீட்டிலும் நன்மதிப்பு இருக்கும்.

மேலும் இம்முகாமில் பங்கேற்காத மாணவர்களை கள ஆய்வு மூலம் சந்தித்து, அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, அவர்கள் எந்த பாடப்பிரிவில் படிக்க விரும்புகிறார்களோ அதனை படிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

உயர்கல்வியில் சேர எந்த உதவி தேவைப்பட்டாலும், மாவட்ட ஆட்சியரையோ அல்லது முதன்மை கல்வி அலுவலரையோ 18005994286 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கூறினார்.

முகாமில் பங்கேற்ற மாணவர்களில் அரசு ஐடிஐயில் 2 மாணவர்களும், பாலிடெக்னிக் கல்லூரியில் 6 மாணவர்களும், அரசு கலைக் கல்லூரியில் 7 மாணவர்களும் என மொத்தம் 15 மாணவர்களுக்கு உடனடி நேரடி சேர்க்கைக்கான உத்தரவினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த, உயர்கல்வி பயின்று வரும் 14 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.60,239 மதிப்பில் உயர் கல்வி உதவித்தொகையினை கலெக்டர் வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top