காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி நாளை ப.வேலூரில் நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்திற்கு கொமதேக ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூர் வாய்க்கால், பள்ளவாய்க்கால், பொய்யேறி வாய்க்கால் என 5 வாய்க்கால்களில் வரும் பாசன நீரில் மொத்தம் 16,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.
இந்த பகுதியில் வெற்றிலை, வாழை, கரும்பு, பாக்கு கோரை போன்ற நீண்ட கால நஞ்சை பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக ராஜாவாய்க்கால் பகுதியில் வெற்றிலை கொடிக்கால் விவசாயம் 5,000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது. இது தினந்தோறும் நீர் பாய்க்கக்கூடிய ஒரு பயிராகும்.
இந்த நிலையில் 5 வாய்க்கால்களிலும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் வாடி, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. தண்ணீர் திறக்க வலியுறுத்தி, பரமத்தி வேலூரில் நாளை 20ம் தேதி விவசாயிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற உள்ள முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




