நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 6.07 கோடி மதிப்பில் நடைபெற்று அரசு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட முதலைப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நகர்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், வாகனங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சாலைக்கு நடுவே தடுப்பு சுவர் அமைக்கும் பணியினையும், அதே பகுதியில் ரிங் ரோடு மேம்பாடு செய்யும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, முதலைப்பட்டி பகுதியில் சிறப்பு நிதியின் கீழ் ரூ. 3.95 கோடி மதிப்பில் மாநகராட்சி மண்டல அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், சேலம் ரோடு, பொன் நகர் பகுதியில் ரூ. 2.12 கோடி மதிப்பில் நிலத்தடி கழிவுநீர் அகற்றும் அமைப்பிற்கான பம்பிங் ஸ்டேஷன் கட்டுமான பணியினையும், ரெட்டிப்பட்டியில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




