என்.சி.இ.ஆர்.டி 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகங்களை மறுஆய்வு செய்து தயாரிப்பதற்காக அமைத்துள்ள புதிய குழுவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பதற்கு காங் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை “கல்வியை மாற்றியமைப்பதற்கும், பிரச்சனைகளை உருவாக்குவதற்கும் நாக்பூர் குழுவால் செய்யப்படும் ‘சங்கீகரிப்பு’ என்று காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “ஒருபுறம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ‘சுத்திகரிப்பு’ என்ற பாவத்தைச் செய்கிறார்கள்; மறுபுறம் பாடப் புத்தகங்களை ‘சங்கீகரிப்பு’ செய்து சாபத்தைக் கொண்டு வருகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி கோட்டாவில் பேசியபோது, இந்தியக் கல்வி முறையைச் சீரழிக்கும் மூன்று தீமைகளாகத் தனியார்மயமாக்கல், மத்தியமயமாக்கல் மற்றும் சங்கீமயமாக்கல் ஆகியவற்றைக் குறிப்பிட்டார், சோனியா காந்தியும் தனது கட்டுரை ஒன்றில் கல்வித் துறை மத்தியமயமாக்கல், வர்த்தகமயமாக்கல், மதமயமாக்கல்) பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் என்று கூறினார்’
மேலும் அவர் கூறுகையில், மத்திய கல்வி அமைச்சராக ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் போக்ரியால், தர்மேந்திர பிரதான் அல்லது பிரல்ஹாத் ஜோஷி என யார் இருந்தாலும், கடந்த 12 ஆண்டுகளாக என்.சி.இ.ஆர்.டி மூலம் இதுவே நடந்து வருகிறது. இதன் பின்னணியில் உள்ள முதன்மைத் சூத்திரதாரி ஆர்.எஸ்.எஸ் தான்” என்று சாடினார்.
11 மற்றும் 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகங்களை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய குழுவில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சார்ந்த ஏ.பி.வி.பி அமைப்புகளுடன் தொடர்புடைய முக்கிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன:
கல்வி அமைச்சகத்தின் மூத்த ஆலோசகரான யதுநாத் தேஷ்பாண்டே, ஏ.பி.வி.பி அமைப்பின் முன்னாள் மாநில இணை அமைப்பாளர் மற்றும் பாஜகவின் அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டவர்.
பிரசாந்த் திவேகர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் தொடங்கப்பட்ட ‘ஞான பிரபோதினி’ என்ற நிறுவனத்துடன் நீண்டகாலத் தொடர்பு உடையவர்.
ஜே.என்.யு பேராசிரியரான வந்தனா மிஸ்ரா, ஏ.பி.வி.பி அமைப்பின் முன்னாள் தேசியச் செயலாளர்.
ரவி ரமேஷ்சந்திர சுக்லா ஆர்.எஸ்.எஸ் சார்பு நிறுவனத்தின் இதழில் ஆசிரியர் குழு உறுப்பினராக இருந்தவர்.
கர்நாடகாவைச் சேர்ந்த நிட்டே பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் சந்தீப் சாஸ்திரி தலைமையில் இக்குழு செயல்படவுள்ளது. இக்குழு 11-ம் வகுப்பு பாடப் புத்தகத்தை வரும் நவம்பர் மாதத்திற்குள்ளும், 12-ம் வகுப்பு பாடப் புத்தகத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள்ளும் தயாரித்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




