டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக கூறி, அரசுக் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.2 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் ஒருவரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (48). இவர் தனியார் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் முதல்வராக பணிபுரிந்து வந்துள்ளார். இச்சூழலில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) தனக்கு தொடர்பு உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் தன்னை அணுகினால் டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர் பதவி வாங்கித்தருகிறேன் என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதை நண்பர்கள் மூலம் அறிந்த நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையைச் சேர்ந்த அரசுக் கல்லூரி பேராசிரியர் மாணிக்கவாசன் என்பவர் தனது மனைவிக்கு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் வாங்கித் தரும்படி சுரேஷ்குமாரை அணுகியுள்ளார்.
இதற்காக சுரேஷ்குமார் கேட்ட தொகை ரூ.2 கோடியையும் சமீபத்தில் மாணிக்கவாசகன் கொடுத்துள்ளார். அத்தொகையை பெற்ற சுரேஷ்குமார், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி பெற்றுத்தராமல் இழுத்தடிப்பு செய்துள்ளார்.
இதில் பொறுமையிழந்த மாணிக்கவாசகன் நடந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப்பரிவு காவல்துறையில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று ஈரோட்டிற்கு சென்று, சுரேஷ்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் மூலம் டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக கூறி சுரேஷ்குமார் மேலும் பல நபர்களிடம் பல கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதன்படி சேலத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.1 கோடி, தர்மபுரியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.70 லட்சம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி மற்றும் சென்னையைச் சேர்ந்த நபரிடம் ரூ.50 லட்சம் என பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கைதான நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுரேஷ்குமார் அளித்த தகவலின்பேரில் சென்னையைச் சேர்ந்த நபரையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.




