Close
ஆகஸ்ட் 27, 2026 9:02 மணி

விஐபிக்கள் தொடர்ந்து தரிசனம் செய்வதால் சாமி தரிசனம் செய்ய முடியவதில்லை: அமைச்சரிடம் பக்தர்கள் புகார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விஐபிக்கள் தொடர்ந்து தரிசனம் செய்வதால் பொது தரிசனத்தில் விரைந்து சென்று சாமி தரிசனம் செய்ய முடியவதில்லை என்றும் சாமி தரிசனம் செய்ய வழக்கத்தைவிட பல மணி நேரம் காத்திருப்பதாகக்  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அவர்களிடம் பக்தர்கள் தெரிவித்தனர்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அவ்வப்போது கோயில்களுக்குச் சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆய்வு செய்தார்.

அப்போது சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற பக்தர்கள் விஐபிக்கள் தொடர்ந்து தரிசனம் செய்வதால் பொது தரிசனத்தில் விரைந்து சென்று சாமி தரிசனம் செய்ய முடியவதில்லை என்றும் சாமி தரிசனம் செய்ய வழக்கத்தைவிட பல மணி நேரம் காத்திருப்பதாகக் கூறினர். பக்தர்கள் அளித்த புகார்களை கேட்ட அமைச்சர் ரமேஷ், இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். அனைத்தும் சரிபார்க்கப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கம்பத்து இளையனார் சன்னதி, பெரியநந்தி உள்ளிட்ட 5-ம் பிரகாரத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், கொடிமரம் அருகே வருகை தந்து சம்பந்த விநாயகரை வழிபட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார் . தொடர்ந்து  எந்தெந்த வழியாக பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள், எவ்வாறு தரிசனம் செய்து வெளியேற்றப்படுகிறார்கள் என்பது குறித்த கியூ லைன் மற்றும் பல்வேறு இடங்களை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கொடிமரம் அருகே உள்ள உள்துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் உடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்ய என்னென்ன ஏற்பாடுகள் செய்யலாம்? என்றும் அதேபோன்று வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி அண்ணாமலையார் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் .

இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், கோவில் இணை ஆணையர் பரணிதரன், மாவட்ட எஸ்பி உதயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், மண்டல இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) பிரகாஷ், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top