பிப்., 1 முதல், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போன் ஆப் மூலம், ஆவின் டீலர்களுக்கு பால் விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் (ஆவின்), தினமும் சராசரியாக, 82,000 லிட்டர் பால் மற்றும் பால் உபபொருட்கள், 355 சில்லறை ஆவின் ஏஜெண்டுகள் மூலம், நாமக்கல் மாவட்ட மக்களின் தேவைக்காக தினசரி விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த, 16ம் தேதி, தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் மற்றும் ஆவின் பால் விற்பனை ஏஜெண்டுகள் பயன்பெறும் வகையில், ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையை அதிகரிக்க, ஏஜெண்டுகள் எளிதாக பால் மற்றும் பால் உபபொருட்கள் தேவைக்கு ஆர்டர்கள் செய்து, அதற்கான தொகையை எளிதாக செலுத்தும் வகையிலும், பால் வினியோக வாகனங்களின் இயக்கத்தை எளிதில் கண்காணிக்கவும், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்தியோக ஆவின் விற்பனை பிரிவு மொபைல் ஃபோன் செயலியை அறிமுகப்படுத்தினார்.
அதையடுத்து, இந்த ஆப் மூலம் வரும், பிப். 1ம் தேதி முதல், அனைத்து ஆவின் ஏஜெண்டுகளும், தினசரி ஆர்டர் பட்டியல் மற்றும் அதற்கான தொகையை, புதிய ஆவின் மொபைல் செயலி மூலமே மேற்கொள்ள வேண்டும்.
செல்போன் மூலம் பெறப்படும் ஆர்டர் பட்டியல் அடிப்படையில், வரும், பிப். 1 முதல், ஏஜெண்டுகளுக்குபால் வினியோகம் செய்யப்படும். அனைத்து ஆவின் ஏஜெண்டுகளுக்கும், வரும் 31 முதல், புதிய செல்போன் செயலியை பயன்படுத்தி தங்களின் ஆர்டர் பட்டியலை உறுதி செய்து, அதற்கான தொகையை செலுத்தி அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



