Close
மே 20, 2024 8:32 மணி

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாளில்…

இங்கிலாந்திலிருந்து சங்கர்

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாள்

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாளில், அவரை பெற்ற அம்மாவை பற்றி..,

எடிசன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நாளில், அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்திருந்தார் ஆசிரியர். அந்தக் கடிதத்தை அம்மா மட்டுமே படிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவரின் ஆசிரியர். அதன்படி அம்மாவிடம் கொடுத்தார்.

அந்தக் கடிதத்தைப் படித்த எடிசனின் அம்மாவின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என எடிசன் கேட்டபோது,

“உங்கள் மகன் மிகவும் புத்திசாலி. அவரின் அறிவுக்கு ஏற்றளவில் இந்தப் பள்ளி இல்லை. அதனால் எடிசனை வீட்டிலிருந்தே படிக்க வையுங்கள்” என்று அம்மா உரக்க படித்ததைக் கேட்டு எடிசன் உற்சாகமாக சப்தமிட்டார்.

ஆண்டுகள் படு வேகமாக கடந்தன. தாமஸ் ஆல்வா எடிசன் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகமே போற்றும் மகத்தான விஞ்ஞானியாக திகழ்ந்து வந்தார். பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஒருநாள் எடிசனின் அம்மாவும் இறந்துபோனார். அதன்பின் சில நாட்கள் கழித்து எடிசன் வேறு ஏதோ தேடுகையில், சின்ன வயதில் ஆசிரியர் கொடுத்தனுப்பிய கடிதம் கிடைத்தது. தன்னைப் பற்றி உயர்வாக எழுதிய கடிதத்தை மீண்டும் படிக்க ஆசைப்பட்டு படித்தார். ஆனால் கடிதத்தில் இருந்த வரிகள் அம்மா வாசித்தவை அல்ல.

“உங்களின் மகன் மனநிலை சரியில்லை எனக் கருதுகிறோம். அவனை எங்கள் பள்ளியில் படிக்க தொடர அனுமதிக்க முடியாது” இந்தக் கடிதத்தைப் படித்ததும் எடிசன் உறைந்துவிட்டார்.

இந்த விஷயம் தனது சின்ன வயதில் தெரிந்திருந்தால் எந்தளவுக்கு மனதளவில் முடங்கி போயிருப்போம் என்பதை ஒரு நிமிடம் நினைத்து தன்னை உதறிக் கொண்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதே பெரிய விஷயமாக இருந்தது. தன் உழைப்பையும் முயற்சியையும் பாராட்டி ஊக்கமளித்த அம்மாவை மனதார நன்றியோடு நினைத்துக்கொண்டார்.

ஒருவர் தன்னைப் பற்றிய விஷயங்கள் முழுவதையும் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதே தனது பழக்க வழக்கங்களில் ஓர் ஒழுங்கைக் கொண்டு வரமுடியும் என்பார்கள். ஆனால் ஒருவருக்கு தன்னைப் பற்றிய சில விஷயங்கள் தெரிய கூடாதவை என்பதும் இருக்கிறது. அதுவும் அவரின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதைத்தான் எடிசனுக்கு அவரது தாய் மறைமுகமாக கற்றுக் கொடுத்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தை எடிசன் படிக்கவே கூடாது என அவரின் தாய் நினைத்திருந்தால், அதை தீயில் எரித்திருப்பார். ஆனால் அதை பின்வரும் காலத்தில் எடிசன் படிப்பது சரிதான் என நினைத்ததாலே, அதைபத்திரப்படுத்தி வைத்திருக்கக்கூடும்.
குழந்தை வளர்ப்பின் ஒவ்வோர் அடியையும் மிகவும் கவனத்துடன் நகர்த்த வேண்டும் என்பதற்கு இது ஆகச் சிறந்த உதாரணம்.

இங்கிலாந்திலிருந்துசங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top