Close
ஜூன் 25, 2026 12:14 காலை

பிரிட்டனில் அறுவை சிகிச்சையின் தந்தை மகரிஷி சுஷ்ருதரின் வெண்கலச் சிலை!

இந்தியாவின் பண்டைய மருத்துவ முறைக்கும், அதன் உலகளாவிய அங்கீகாரத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு பிரிட்டனில் நடந்துள்ளது.

நவீன பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் முன்னோடியாகவும், “அறுவை சிகிச்சையின் தந்தை” என்றும் போற்றப்படும் மகரிஷி சுஷ்ருதரின் 90 கிலோ எடை கொண்ட வெண்கலச் சிலை, பிரிட்டனில் உள்ள எடின்பர்க் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் வளாகத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்த மகரிஷி சுஷ்ருதர், உலகின் மிக ஆரம்பகால மருத்துவப் பள்ளிகளில் ஒன்றோடு தொடர்புடையவர். அவர் தனது காலத்தில் 300-க்கும் மேற்பட்ட வகையான அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் 124 தனித்துவமான மருத்துவக் கருவிகளை அவரே கண்டறிந்து வடிவமைத்தார். இந்த அறிவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க, உலகின் முதல் அறுவை சிகிச்சை நூலான ‘சுஷ்ருத சம்ஹிதா’ என்ற காவியத்தை எழுதினார்.

நவீன பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உருவாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, நெற்றியின் தோலைப் பயன்படுத்தி மூக்கு மறுசீரமைப்பு சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து காட்டியவர் இவரே.

பிரிட்டனில் வாழும் தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த பிரபல அறுவை சிகிச்சை நிபுணரான பேராசிரியர் சந்திர செருவு மற்றும் அவரது குடும்பத்தினரால் நிறுவப்பட்ட ‘செருவு ஃபேமிலி ஃபவுண்டேஷன்’ இந்தச் சிலையை வழங்கியுள்ளது. மிக முக்கியமாக, இந்த 90 கிலோ வெண்கலச் சிலை தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு சிற்பியால் செதுக்கப்பட்டது என்பது நம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

1505-இல் நிறுவப்பட்டு, உலகம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் 33,000-க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு விளங்கும் உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய இந்த அறுவை சிகிச்சை நிறுவனத்தின் ‘பிளேஃபேர் தியேட்டரில்’ இச்சிலை முறைப்படி நிறுவப்பட்டுள்ளது.

இச்சிலை திறப்பு விழாவில் எடின்பர்க்கிற்கான இந்திய தூதர் சித்தார்த் மாலிக், ராயல் கல்லூரியின் தற்போதைய தலைவர் பேராசிரியர் கிளேர் மெக்நாட், முன்னாள் தலைவர் பேராசிரியர் ரோவன் பார்க்ஸ், கலிபோர்னியா ஆயுர்வேதக் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் மார்க் ஹால்பர்ன் மற்றும் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உலகிற்கு இந்தியாவின் உண்மையான மருத்துவ வரலாற்றை உணர்த்துவதும், சுஷ்ருதரை உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணராக கௌரவிப்பதுமே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

சிலை திறக்கப்பட்ட அதே வேளையில், பேராசிரியர் சந்திர செருவு எழுதிய மகரிஷி சுஷ்ருதா: அறுவை சிகிச்சையின் தந்தை என்ற ஆதாரப்பூர்வமான புத்தகமும் வெளியிடப்பட்டது. இச்சிலையையும் புத்தகத்தையும் எடின்பர்க் ராயல் கல்லூரி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதன் மூலம், மகரிஷி சுஷ்ருதர்தான் “அறுவை சிகிச்சையின் தந்தை” என்பதை உலக மருத்துவ சமூகம் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

இந்த புத்தகத்தில் உலகெங்கிலும் உள்ள ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவத் துறையைச் சேர்ந்த 36 வல்லுநர்கள், சுஷ்ருதரின் மருத்துவ முறைகள் 21-ஆம் நூற்றாண்டிற்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். நவீன மருத்துவம் ‘ஹிப்போகிரட்டீஸ் உறுதிமொழியை’  பின்பற்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சுஷ்ருதர் மருத்துவ அறநெறிகளை வகுத்திருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் சந்திர செருவுவின் குடும்பம் ஆந்திரப் பிரதேசத்தின் தெனாலிக்கு அருகிலுள்ள பெரவல்லி கிராமத்தைச் சேர்ந்தது. இவர்களது குடும்பம் கடந்த 600 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கிராம மக்களுக்கு இலவச மூலிகை மருத்துவச் சேவையை வழங்கி வருகிறது. பேராசிரியர் சந்திர செருவுவின் தந்தை மறைந்த டாக்டர் சி.எஸ். சாஸ்திரியும் விஜயவாடாவில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார். அவரது நினைவாக, உலகெங்கிலும் உள்ள சிறந்த மருத்துவ மையங்களுக்குச் சென்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக, இரண்டு நிரந்தர வருடாந்திர உதவித்தொகைத் திட்டங்களையும்  இக்குடும்பம் ராயல் கல்லூரி மூலம் தொடங்கியுள்ளது.

இந்த வெண்கலச் சிலை உலக அரங்கில் நிறுவப்பட்டதன் மூலம், இந்தியாவின் பழங்கால மருத்துவ பாரம்பரியமும், நவீன அறுவை சிகிச்சைக்கு அடித்தளமிட்ட சுஷ்ருதரின் பெருமையும் உலக அளவில் நிலைநாட்டப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top