Close
ஜூன் 25, 2026 1:48 காலை

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம்

மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம்  நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இளம்பிள்ளை வாதம் போலியோ வைரஸால் பாதிக்கப்பட்டு முடமாக்கக்கூடியதும், மரணத்தை வரவழைப்பது தொற்றுநோய் ஆகும். மலத்துகள்களினால் மாசடைந்த நீர் அல்லது உணவு, வாய் வழியாக உட்கொள்ளப்படும் போது இளம்பிள்ளை வாத தொற்று ஏற்படுகிறது.

இந்நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90 சதவீதம் பேரில் அறிகுறிகள் ஏதும் தோன்றுவதில்லை. எனினும் போலியோவைரஸ் இரத்த ஓட்டத்துடன் கலந்து விடின் பலவகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களில் போலியோ வைரஸ் மைய நரம்பு தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களை தாக்குவதனால் தசை நார்கள் பலவீனமுற்று தீவிரமான தளர்வுவாதத்தை உருவாக்குகிறது.

சுவாசப்பாதை. இரைப்பை, குடல் உபாதைகள் நிமோனியா, நிரந்தர தசை வாதம் மற்றும் சிறுநீர் பாதை தொற்று ஆகியவை இந்நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஆகும்.

இந்தியாவில் 2011ம் ஆண்டு இறுதியாக போலியோ நோய் பதிவு செய்யப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் 2014-ல் போலியோ இல்லாத இந்தியா என சான்று அளித்தது. எனினும் நமது அண்டை நாடுகளில் போலியோ தொற்று இன்று வரை இருப்பதினால், வருடத்திற்கு ஒருமுறை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 28.06.2026-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது .

மேலும், 29.06.2026 முதல் 04.07.2026 வரை வீடுகளை பார்வையிடுதல் மூலம் விடுபட்ட 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்பொழுது நடைபெறும் முகாமில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 544 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக மொத்தம் 1945 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை , ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம். சத்துணவு, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை. வருவாய்த் துறை,ரோட்டரி சங்கம். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இம்முகாமில் பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். மேலும் அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது, பாதுகாப்பானது.

எனவே மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள 28.06.26 அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் தற்போது நடைபெறும் முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் அன்றைய தினம் வெளியூர் செல்லநேர்ந்தாலும் அருகில் உள்ள மையங்களில் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top