Close
செப்டம்பர் 20, 2024 6:27 காலை

சம்பா நெற்பயிரில் களைக் கட்டுப்பாடு.. வேளாண்துறை யோசனை

புதுக்கோட்டை

நெற்பயிரில் களை எடுக்க யோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் மேற்கொள்ள வேண்டிய களைக் கட்டுப்பாடு முறைகள் குறித்து வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.

நெற்பயிரில் சரியான தருணத்தில் களைகளைக் கட்டுப்படுத் தவில்லையென்றால் 70% சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படலாம். களையெடுக்கா  பயிர் கால் பயிர் என்ற பழமொழி உண்டு.  எனவே விவசாயிகள் நெற்பயிரில் ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாட்டு முறைகளைச் செயல்படுத்தி களைகளை அழித்து உயர் மகசூல் பெற்றிட வேண்டும்.

நெல் சாகுபடி செய்யும் நிலத்தில் கோடை உழவு செய்ய வேண்டும். கோடை உழவு செய்வதால்இ வயலிலுள்ள களைச் செடிகள் குறிப்பாக கோரை போன்ற களைகள் மண்ணின் மேல்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து இந்த களைச் செடிகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும் நிலத்தில் தொழுஉரம் இடும்பொது நன்கு மத்திய தொழு உரம் அல்லது சாணத்தை இட வேண்டும். மக்காத தொழு உரம் அல்லது சாணத்தை நிலத்தில் இட்டால் அதிலுள்ள பல விதமான களை விதைகள் நிலத்தில் பரவி விடும்.

மேலும் களை வளராது செய்ய வேண்டுமென்றால் வயலினை நன்கு சமன் செய்து விதைக்க வேண்டும். வரப்பிலுள்ள களைகளை அகற்றி வரப்பினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சலும் பாச்சலுமான தக்க நீர் மேலாண்மை முறைகளைக் கையாண்டு, களைகளைக் கட்டுப்படுத்தலாம். நேரடி நெல் விதைப்பில் களைகளின் பாதிப்பு அதிகமிருக்கும். குறைந்த பட்சம் ஐம்பது நாட்கள் வரை களைகள் இல்லாத சூழ்நிலையை பயிருக்கு உருவாக்கித் தர வேண்டும்.

வழக்கமான நாத்து விட்டு நடவு செய்யும் வயலில் நடவு செய்த 3 – 5 நாட்களில் களைக்கொல்லி தெளித்து பின்னர் 30 – 40 நாட்களில் கைக்களை அல்லது 15 – 20 மற்றும் 30 – 40 நாட்களில் இருமுறை கைக்களை எடுக்கலாம். திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்த 10, 20,  30, 40 நாட்களில் கோனோ வீடர் கொண்டு களைகளை மடக்கி விட்டு மண்ணை கிளறி விடலாம். களைகளை மண்ணில் அமிழ்த்தி, இயற்கை உரமாக மாற்றச் செய்யலாம்.

வயலில் களைகள் முளைக்கும் முன் ஏக்கருக்கு பென்டிமெத் தலின் 1 லிட்டர் அல்லது பிரிடிலாக்குளோர் 450 மி.லி, பைரசோசல்பூரான் ஈத்தைல் 80 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை விதைத்த 5 நாட்களுக்கள் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். நிலத்தில் ஈரம் அதிகமாக இருந்தால் களைக்கொல்லியினை 20 கிலோ மணலுடன் கலந்து தூவலாம்.

களைகள் முளைத்த பின், புல் வகைக் களைகளைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு பிஸ்பைரிபாக்சோடியம் 10 ஈசி, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 80 மிலி மற்றும் அகன்ற இலை, மற்றும் கோரை வகைக் களைகளைக் கட்டுப்படுத்த மெட்சல் பியூரான் மீத்தைல், குளோரி மியூரான் ஈத்தைல் 20%  WP 8 கிராம், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் களையின் 2 – 4 இலைப் பருவத்தில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

களைக்கொல்லி தெளிக்கும் போது வயலில் பின்னோக்கி நடந்து தெளிக்க வேண்டும். களைக்கொல்லி தெளித்த பின் வயலில் இரு தினங்களுக்கு நடக்கக் கூடாது. நடந்தால் களைக்கொல்லி காலில் ஒட்டிக்கொண்டு களைகள் வளர ஏதுவாகும். களைக்கொல்லி தெளிக்கும்போது மண்ணில் ஈரம் இருக்க வேண்டும்.

களைக்கொல்லி தெளித்த பின் தெளிப்பானை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும் (அல்லது) களைக்கொல்லி தெளிப்பதற்குத் தனி கைத்தெளிப்பானைப் பயன்படுத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்  மெ. சக்திவேல்  வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top