Close
ஏப்ரல் 24, 2026 12:50 காலை

கள்ளழகர் திருவிழாவுக்கு துருத்தி விற்பனை படு ஜோர்

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றல் இறங்கும் பொழுது சாமி மீது தண்ணீரை பீச்சி அடிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தி விற்பனை தொடங்கப்பட்டது.

மதுரை சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மற்றும் நாளை காலை தேரோட்டமும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது . அதனைத் தொடர்ந்து நாளை இரவு எதிர்சேவை நடைபெற உள்ளது.

பின்னர் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் காலை நடைபெற உள்ளது. அப்போது கள்ளழகர் சுவாமிக்கு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் இறங்கும் பொழுது ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தியை வைத்து தண்ணீரை சுவாமி மீது பீய்ச்சி அடிப்பார்கள்.

துருத்தி என்பது ஆட்டு தோலால் செய்யப்பட்ட தண்ணீர் பை, இந்த துருத்தி தற்போது மதுரை அவனியாபுரம் பகுதியில் ரூபாய் 500 முதல் 600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஏராளமான கள்ளழகர் பக்தர்கள், விரதம் இருப்பவர்கள் ஆவலுடன் இந்த ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தியை வாங்கி செல்கின்றனர்.

சித்திரை திருவிழாவையொட்டி மதுரையே களைகட்டி உள்ள நிலையில் மறுபுறம் இந்த துருத்தி வியாபாரம் சூடு பிடித்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top