Close
செப்டம்பர் 20, 2024 5:37 காலை

சோழவந்தானில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் நிலையில், சோழவந்தானின் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில், கலந்து கொண்ட அதிமுக கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் பேரூராட்சி நிர்வாகத்திடம் சோழவந்தானின் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் அம்ருத் குடிநீர் திட்டத்திற்காக தோன்டிய சாலைகளை உடனடியாக சரி செய்து புதிய சாலை மற்றும் வடிகால் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.
இதுகுறித்து, அதிமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவரும் தற்போதைய பேரூராட்சி கவுன்சிலருமான கொரியர் கணேசன் கூறுகையில்: சோழவந்தான் பகுதியில், போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால், பேருந்துகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்கு போதிய அளவில் இட வசதி செய்யாததால், எம். டி .சி. சி. வங்கி முன்பு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

முக்கியமாக, வாடிப்பட்டியிலிருந்து வந்து செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வர முடியாத சூழ்நிலை உள்ளது. அதேபோன்று, மதுரையில் இருந்து குருவித்துறை கருப்பட்டி நாச்சிகுளம் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பேருந்துகளும் பேருந்து நிலையம் வந்து செல்ல போதுமான இட வசதி இல்லாததால், போக்குவரத்து பணியாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் . இவைகளை கருத்தில் கொண்டு சோழவந்தான் எம் .டி .சி .சி. வங்கி அருகே உள்ள இடங்களை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இதே போல், சி. எஸ். ஐ. சர்ச் அருகில் உள்ள மின்கம்பத்தை அகற்றி, பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறி செல்வதற்கு இடவசதி ஏற்படுத்தித்தர வேண்டும்,

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நாள் முழுவதும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்திற்கு வழி செய்திட வேண்டும், மார்க்கெட் ரோடு ஒரு வழி பாதை ஆக உள்ள நிலையில் அதை போக்குவரத்து காவலர்கள் மூலம் முறைப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும், சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பசும்பொன்நகர் பகுதிகளில் அம்ருத் குடிநீர் திட்டத்திற்கு தோண்டிய சாலைகளை உடனடியாக சரி செய்து புதிய சாலை மற்றும் குடியிருப்புகளுக்கு வடிகால் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே போல், 3வது வார்டுக்கு தனி ரேஷன் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறியிருக்கிறோம் என்று கூறினார்.

கூட்டத்தில், பேரூராட்சி தலைவர் , துணைத் தலைவர் மற்றும் பணி நியமனக் குழு உறுப்பினர் உள்பட திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top