பெண்களிடம் நிபந்தனை இல்லாத அன்பு செலுத்தும் குடும்பம் வெற்றி பெறும் என்று மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார் இது பற்றிய விவரம் வருமாறு:
மதுரையில் பாரதி யுவகேந்திரா சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ‘ஸ்த்ரீ ரத்னா’ விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பஞ்சாப் நேஷனல் வங்கியின்ஓய்வு பெற்ற மூத்த மேலாளர் திருப்பதி, தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல சங்க மாவட்டத் தலைவர் பூபதி,ஆதவன் முன்னிலை வகித்தனர்.
இயற்கை விவசாயம், மருத்துவம், ஆராய்ச்சி, சமையல் கலை, கல்வி, தொழில் முனைவோர், பொதுநலம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்புற விளங்கிய பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். சாதனைப் பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஸ்திரீ ரத்னா விருது, கேடயம், சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: பெண்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். திருமணத்தின் போது, அனைத்தையும் விட்டு விட்டு கணவனை மட்டும் ஏற்றுக் கொண்டு வரும் பெண்ணிடம் மிகுந்த அன்பைக் காட்ட வேண்டும்.
முடிந்தவரை அவர்களைப் பாராட்ட வேண்டும். ஆனால், நாம் யாரும் பாராட்டுவதே இல்லை. தாய்மை என்பதே மகத்தான விஷயம். தாய்மை என்ற நிலை வரும் போது ஒரு மான் கூட, சிங்கத்தை எதிர்க்கும்.
இந்திய குடும்ப வாழ்க்கை மகத்தானது. நம் நாடு போல, வேறெங்கும் இல்லை. குடும்ப நிலையையும் உயர்த்தி கலாச்சாரத்தையும் கடைப்பிடிக்கும் ஒரே நாடு இந்தியா தான். குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் பெண்களை நாம் போற்ற வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.
விழா ஏற்பாடுகளை, பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.