Close
மார்ச் 7, 2026 9:35 மணி

திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட ஆட்சியர்

திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார்.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்கின்றனர்.

திருவண்ணாமலை மாடவீதிகளில் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருக்கோவிலுக்கு செல்வதற்காக ஆட்டோவை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர், இதனால் நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளூர் வாசிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் அதிக அளவில் பயணிகளை ஆட்டோவில் ஏற்றுதல் அதிக பணம் வசூலித்தல் போன்ற புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிக அளவில் குவிந்துள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாநகராட்சி உட்பட்ட முக்கிய பகுதிகளான அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் காலை திடீரென மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் போக்குவரத்து காவல்துறையினர் என கூட்டாக இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது சாலைவரி, இன்ஷூரன்ஸ், பொல்யூஷன் சர்டிபிகேட் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய லாரி, ஆட்டோ, டாட்டா ஏசி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்டோக்களுக்கு கியூ ஆர் கோட் ஸ்டிக்கர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கியூ ஆர் கோட் இல்லாமல் இயங்கும் ஆட்டோக்களை கண்டறிந்து கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் வழங்கியும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய ஆட்டோக்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள வளாகத்தில் வைத்து ஆவணங்கள் சரி பார்த்து மீண்டும் உரிமையாளர்களுக்கு வாகனத்தை வழங்கப்பட்டது.

ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட லாரிக்கு ரூ.15 ஆயிரம், ஆட்டோ மற்றும் டாட்டா ஏசி வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மீண்டும் ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களை முழுமையாக பறிமுதல் செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாநிதி வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top