Close
ஜூன் 14, 2025 11:57 மணி

மாட வீதியில் 100 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம்: பக்தர்கள் மகிழ்ச்சி

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்ச பூதங்களில்  அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சாலைகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு இடையூறாக மாட வீதிகளில் ஒன்றான தேரடி தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகிறது.

தேரடி தெருவில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை அளவீடு செய்தபோது விநாயகா் தோ், முருகன் தோ் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் தேநீா் கடை, பெட்டிக் கடை, இனிப்பகம், உணவகம், பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் கடை என 11 ஆக்கிரமிப்புக் கடைகள் இருந்தது தெரிய வந்தது.

இந்தக் கடைகள் சுமாா் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்ததும், இதனால் தேரடி தெருவின் அகலம் குறைந்து காணப்பட்டதும் தெரிய வந்தது.

ஆக்கிரமிப்புக் கடைகள் இடித்து அகற்றப்பட்ட பிறகு, தேரடி தெரு விசாலமாக காட்சியளிக்கிறது. மேலும், ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 3 மண்டபங்கள் இதுநாள் வரை பக்தா்களுக்கு தெரியாத வகையில் மறைத்து ஆக்கிரமிப்புக் கடைகள் கட்டப்பட்டிருந்தது. இந்த மண்டபங்கள் தற்போது வெளியே தெரிந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த மண்டபத்திற்கு மாணிக்கவாசகர் மண்டபம் என பெயர் உண்டாம் . அதேபோல் சக்கரை குளம் சுற்றியுள்ள தெருவிற்கு மாணிக்கவாசகர் தெரு என்ற பெயரும் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பல வருடங்களுக்கு முன்பு இந்த மண்டபத்தில் திருவிழாவின் போது அண்ணாமலையார் எழுந்தருவி மண்டகப்படி நடக்குமாம். கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால் அந்த வழக்கம் நிறுத்தப்பட்டிருந்ததாகவும்  தெரிவித்தனர்.

தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் ஞானவேலு தலைமையில், உதவி கோட்டப் பொறியாளா் அன்பரசு, உதவிப் பொறியாளா் சசிக்குமாா் ஆகியோா் மேற்பாா்வையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 11 ஆக்கிரமிப்புக் கடைகளையும் இடித்து அகற்றப்பட்டன.

தாமரைக் குளம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை ஏன் அகற்றவில்லை அதேபோல் திருவண்ணாமலையில்  குளங்களை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாந்தோப்பு மற்றும் மிகவும் பழமை வாய்ந்த பச்சையம்மன் கோயில் அருகில் உள்ள செட்டிகுளம் (பச்சையம்மன் குளம்) பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அண்ணாமலையார் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top