நாமக்கல் அருகே ஆடுகளை கடித்துக் கொல்லும் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வெறிநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. அவை தோட்டங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகளையும், பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆடுகளையும் அடிக்கடி கடித்துக்கொன்று விடுகின்றன. இதனால் ஆடு மேய்க்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுகின்றனர்.
புதுச்சத்திரம் அடுத்த நாட்டாமங்கலம் பஞ்சாயத்து, குட்டமூக்கன்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயி ராஜேந்திரன் எனபவர் ஆடு வளர்த்து வருகிறார். அவர் தனது வீட்டின் முன்புறம் கட்டி வைத்திருந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக்குதறின. இதனால் 3 ஆடுகள் இறந்துவிட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும்.
வெறிநாய்கள் கடித்ததால், ஆடுகளை இழந்த விவசாயிக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அப்பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




