நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான 175 ஏக்கர் நிலத்தை, தனியார் தோல் தொழிற்சாலைக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாய சங்க செயலாளர் பகீர் தகவல் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (23.6.2025) 270.36 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 83.41 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது.
2025 -26 ஆம் ஆண்டில் மே 2025 மாதம் வரை நெல் 67 எக்டர், சிறுதானியங்கள் 3,867 எக்டர் பயறு வகைகள் 884 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 3,224 எக்டர், பருத்தி 445 எக்டர் மற்றும் கரும்பு 562 எக்டர் என மொத்தம் 9,049 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 72 எக்டர், கத்திரி 58 எக்டர், வெண்டை 44 எக்டர், மிளகாய் 5 எக்டர், மரவள்ளி 68 எக்டர், வெங்காயம் 109 எக்டர், மஞ்சள் 6 எக்டர் மற்றும் வாழை 4 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் கூறிய கருத்துக்கள்:
பாலசுப்ரமணியன் (மாநில பொதுச்செயலாளர், விவசாயிகள் முன்னேற்ற கழகம்): தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பட்டா, சிட்டா, அடங்கல், சிபில் ஸ்கோர் மற்றும் ஜாமின்தாரர் போன்ற ஆவணங்கள் வழங்கியும் கடன் தருவதில் தாமதம் செய்கின்றனர். விரைவாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தனியார் தோல் தொழிற்சாலைக்கு, 175 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து, வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிக்கு உரிய நிலங்கள் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. அதை தனியாருக்கு தாரை வார்ப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்
இதற்கு ஆட்சியர் துர்காமூர்த்தி, இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
துரைசாமி (விவசாயி) கூறுகையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். அரசே விலை நிர்ணயம் செய்வதுடன், கொள்முதலும் செய்ய வேண்டும். இவற்றை, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேலும், டிராக்டர் வைத்துள்ள விவசாயிகளுக்கும், மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என கூறினார்
சந்திரசேகரன் (விவசாயி) பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில், கால்நடை வளர்ப்பு குறைந்துள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் எவ்வளவு உள்ளது. அவற்றில் ஆக்கிரமிப்பு நிலங்கள் எவ்வளவு என்பதை குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். முன்பு, அரசு மானிய விலையில் வைக்கோல் வழங்கியது. தற்போது, வெளிமாநிலத்தில் இருந்து அதிக விலை கொடுத்து வைக்கோல் வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது என்று கூறினார்




