Close
மார்ச் 7, 2026 2:52 மணி

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்தியபிறகு, இடமாறுதல் கவுன்சலிங்: முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், நாமக்கல் ராமு.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்திய பிறகு, இடமாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு 2025 -26 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கவுன்சலிங் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மூத்த மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு 4 சதவீத பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலை சேகரித்து, அதை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி முன்னுரிமை பட்டியலில் இணைத்து அதற்குப் பிறகு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் முதுகலை ஆசிரியர்களுக்கான உள் மாவட்ட, பொது மாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 3 அன்றும், வெளிமாவட்ட கலந்தாய்வு 4ம் தேதி அன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திய பிறகு, முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தினால் பதவி உயர்வில் செல்லக்கூடிய மூத்த முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றிய சில காலிப்பணியிடங்கள் தங்களுக்கு கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில், தற்போது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தாமதமாகிறது.

இந்த நிலையில் ஜூலை முதல் வாரமே முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு முதுகலை ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடத்தாமல் நடைபெற உள்ள இந்த பொது மாறுதல் கலந்தாய்வால் பெரிய அளவில் முதுகலை ஆசிரியர்களுக்கு நன்மை இல்லை. இதனை தமிழ்நாடு அரசு முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும்.

மேலும் ஏற்கனவே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு விகிதாச்சாரத்திற்கான காலி பணியிடங்களை ஒதுக்கி வைத்து விட்டு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், தற்போது மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு விகிதாச்சாரத்திற்குரிய காலிப் பணியிடங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கான மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் .

அல்லது மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு சீனியாரிட்டில் பட்டியலை விரைவில் தயாரித்து அதனை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலுடன் இணைத்து பதவி உயர்வு கலந்தாய்வு முதலிடம் நடத்த வேண்டும். அதன் பிறகு முதுகலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top