மோகனூர் பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் தீர்த்தக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் சுமார் 3 ஆண்டுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திரளான விவசாயிகள் தீர்த்தக்குடங்களுடன் நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு வந்தனர். டி.ஆர்.ஓ., சுமன் கீழ் தளத்திற்கு வந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இது குறித்து, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
மோகனூர் பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி, அப்பகுதி மக்கள், 3 ஆண்டுகளாக தொடர்ந்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை, 49,000 ஏக்கர் நிலங்களை பல்வேறு தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்தி உள்ளனர். அதில், 15,000 ஏக்கர் நிலங்களில் மட்டுமே தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள, 35,000 ஏக்கர் விளை நிலங்கள் தரிசு நிலங்களாக உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு தொழிற்பேட்டைகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக சிப்காட் தொழிற்பேட்டை தேவையற்றது. அதனால், தமிழக அரசு இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
நாமக்கல் வருகை தரும் தமிழக துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்து, இது குறித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தீர்த்தக்குட போராட்டத்தில் பா.ஜ., விவசாய அணி மாநில நிர்வாகி ராதிகா, சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், ரவிச்சந்திரன், பழனிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.




