நாமக்கல் பகுதியில் அனுமதியின்றி செயல்படும், தனியார் மாணவ மாணவியர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆர்டிஓவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இது குறித்து, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் நாமக்கல் ஆர்.டி.ஓ.விடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஏராளமான தனியார் பள்ளிகள் மற்றும் நீட் கோச்சிங் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழகம் முழுவதும் இருந்து வரும் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்காக சுமார் 75க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றன. அந்த விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படுவதில்லை.
அனைத்து தனியார் விடுதிகளும் முறைப்படி உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும் என, ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்திருந்தார். அதன்பின்னரும், இதுவரை தனியார் விடுதிகள் அனுதி பெறாமல் செயல்படுகின்றன.
தனியார் விடுதிகள் நடத்துவதற்கு, சட்ட விதிமுறைகளின்படி 12க்கும் மேற்பட்ட துறைகளில் முன் அனுமதி பெறவேண்டும். ஆனால், நாமக்கல்லில் விதிகளுக்கு புறம்பாக அனைத்து விடுதிகளும் செயல்படுகிறது. அதனால், அங்கு தங்கியிருக்கும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, விதிகளுக்கு புறம்பாக செயல்படும் அனைத்து விடுதிகளையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




