Close
மார்ச் 7, 2026 4:40 மணி

பயிர் கடன் வழங்காமல் இழுத்தடிக்கும் கூட்டுறவு சங்கங்கள்: முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சட்டசபை தேர்தலை காரணமாக வைத்து, தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதை, கூட்டுறவுத் துறை தவிர்த்து வருகிறது. எனவே இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்காக அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களை நாடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பயிர் கடனைப் பெற்று விவசாயம் செய்து, பயிர் அறுவடை முடிந்த பின் அந்த பணத்தில் இருந்து கடனை திருப்பி செலுத்துவார்கள். பின்னர் அடுத்த ஆண்டு மீண்டும் பயிர் கடன் வாங்குவது வாடிக்கை.

விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்குவதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் முதலிடம் வகிக்கின்றன. சில பெரிய விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்கடன் மற்றும் டிராக்டர்கள் உள்ளிட்ட கடன்களை வாங்கி திருப்பிச் செலுத்துவார்கள்.

கடந்த ஆண்டு வரை பயிர் கடன் வழங்க, கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளின் நிதி நிலையை அறியும், சிபில் ஸ்கோர் கேட்பதில்லை. நிலம் மற்றும் சாகுபடி பயிர் குறித்த ஆவணங்களை அளித்தால் கடன் வழங்குவது வழக்கம்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தொழில் கடன் வழங்கும்போது சிபில் ஸ்கோர் பார்ப்பது வாடிக்கை. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் கேட்டு செல்லும் விவசாயிகளுக்கு, சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் கடன் வழங்கமுடியும். சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கடன் வழங்க முடியாது என கூட்டுறவு சங்கங்கள் கைவிரித்தன.

இதற்கு தமிழகம் முழுவதும் அனைத்து அனைத்து விவசாய சங்கங்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகளின் ஒரே நம்பிக்கையான கூட்டுறவு சங்க கடனை, சிபில் ஸ்கோர் பார்க்காமல் வழக்கமான எளிய முறையில் வழங்க வேண்டும் என அவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகேள் விடுத்து வந்தனர்.

இது சம்மந்தமாக பல இடங்களில் விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாநில கூட்டுறவு கடன் சங்கங்களின் பதிவாளர் கடந்த 17ம் தேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் விவசாயிகள் பெறும் பயிர் கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கேட்கத் தேவையில்லை. அந்த பகுதிகளில் உள்ள வணிக வங்கிகளில் கடன் வழங்க தடையில்லா சான்று (என்ஓசி) பெற்று வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வணிக வங்கிகளில் தடை இல்லா சான்று பெற்று வந்து தரவேண்டும் என்று தெரிவிப்பது, விவசாயிகள் அந்த பகுதியில் உள்ள அனைத்து வங்கிகளிலும் சென்று தடை இல்லா சான்று பெற வேண்டும். சிபில் ஸ்கோர் கேட்பதை விட இது விவசாயிகளுக்கு பெருத்த சிரமத்தை உண்டாக்கும். மற்ற வங்கி அதிகாரிகள் எளிதில் தடையில்லா சான்று வழங்க மாட்டார்கள்.

தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்கள் போராடி வருவதை திசை திருப்பதற்காக, கூட்டுறவுத்துறை இது போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். எனவே உடனடியாக கூட்டுறவு சங்க பதிவாளர் அனைத்து விவசாய சங்கங்களையும் அழைத்து பேச வேண்டும். அனைத்து வணிக வங்கிகளிலும் தடையில்லா சான்று பெறுவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறாமல் இருப்பதற்காக பதிவாளர் இது போன்ற சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார், உடனடியாக இந்த சுற்றறிக்கை திரும்பப் பெற வேண்டும். உடனடியாக விவசாயிகளுக்கு பழைய முறையில் எந்தவிதமான தங்கு தடை இன்றி விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டசபை தேர்தல் காரணமா ? :
வழக்கமாக தமிழகத்தில் ஒவ்வொரு முறை சட்டசபை தேர்தல் நடைபெறும் போதும், அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக தேர்தல் அறிக்கை வெளியிடுவார்கள். அப்படி வருகிற 2026ம் ஆண்டிற்கும் அரசியல் கட்சிகள் விவசாய பயிர் கடன் தள்ளுபடி அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

அப்படி அறிவித்தால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தேர்தல் முடியும் வரை யாரும் செலுத்த மாட்டார்கள். இதை அடிப்படையாக வைத்து, இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கம் பயிர் கடன் வழங்குவதை தவிர்ப்பதற்காக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது.

உடனடியாக எளிய முறையில் பயிர் கடன் வழங்காவிட்டால், அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து தொடர் போராட்டதில் ஈடுபடுவோம். மேலும் இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு விவசாய சங்க பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேசி கடன் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில், விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்குவதற்கு, புதிய நடைமுறைகளை ரத்து செய்துவிட்டு, வழக்கம்போல் எளிதான முறையில் பயிர் கடன் வழங்கக்கோரி, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், வருகிற ஆக. 14ம் தேதி காலை 11 மணிக்கு, சென்னை எக்மோர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து, மாபெரும் விவசாயிகள் பேரணி புறப்பட்டு, சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து திரளான விவசாயிகள் கலந்துகொள்வார்கள் என சங்கத்ததின் மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி அறிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top