நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் மகளிர் விடுதி கூடுதல் கட்டிடத்தை, மாநிலங்களவை எம்.பி., ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் யமுனா மகளிர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமாரின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 75 லட்சம் மதிப்பில் கூடுதல் தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் திறப்பு விழா கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், ராஜேஷ்குமார் எம்.பி., விழாவில் கலந்துகொண்டு புதிய கூடுதல் ஹாஸ்டல் கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசியதாவது:
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ரூ. 75 லட்சம் ரூபாய் மதிப்பில், 16 அறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதில், 40 மாணவிகளுக்கான தங்கும் அறை மற்றும் பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகள் இந்த கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றனர். இந்த கல்லூரி வளாகத்தில், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து நவீன ஆவின் ஆட்டோமேட்டிக் பால் பண்ணை நிறுவப்படுகிறது. அதனால், மாணவ மாணவியர் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப பாடப்பிரிவில் பயில்வதற்கு ஆர்வத்தை செலுத்தி, உங்களது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
அட்மா குழு தலைவர் நவலடி, மாநகர துணை மேயர் பூபதி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராணி, கூட்டுறவாளர் ராணா ஆனந்த், கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




