நாமக்கல் நகரில் மளிகைக் கடைக்குள் புகுந்து, ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகையை திருடி சென்ற, 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து, பணம், நகையை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன், இவரது மனைவி லட்சுமி (52). அவரது மூத்த மகன் சுதர்சன், திருமணமாகி பெங்களூரில் வசித்து வருகிறார். லட்சுமி கணவனை இழந்த நிலையில், தனது இளையமகன் லோகேசுடன் வசித்து வருகிறார்.
அப்பகுதியில், மளிகைக் கடை நடத்தி வரும் லட்சுமி, தினமும் காலை 6 மணிக்கு கடையை திறந்து, வியாபாரம் முடித்து, இரவு 8 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவது வழக்கம். கடந்த 25ம் தேதி இரவு லட்சுமி வழக்கம் போல் மளிகைக் கடையை பூட்டிவிட்டு, லட்சுமி தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அடுத்த நாள் காலை 6 மணிக்கு கடையை திறக்க சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே வைத்திருந்த, ரூ. 1 லட்சம் ரூபாய் ரொக்கம், அறுந்துபோன 2 பவுன் தங்க செயின் திருட்டுப்போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து, நாமக்கல் காவல்துறையில் புகார் செய்யப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இதற்கிடையில், அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவுகளைப் பார்த்தபோது, அதிகாலை 1 மணிக்கு, மளிகைக் கடையில் இருந்து, 2 வாலிபர்கள் சந்தேகம்படும் வகையில் வருவது தெரியவந்தது.
விசாரணையில், அருகில் உள்ள பைக் பட்டறையில் பணியாற்றும், சேந்தமங்கலம் ரோடு எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கவுதம் (31) என்பதும், அவரது நண்பர் செல்லப்பா காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி (25) என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து, கவுதம், முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து, ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




