திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு செழுஞ்சுடர் விநாயகர், ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், மானசாதேவி, உமா தேவியார், குரு தட்சணாமூர்த்தி மற்றும், சித்தர்கள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் ,பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஆடிப்பூர நிகழ்வின் முக்கிய நிகழ்வான துர்க்கை அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு ரவிக்கை, வளையல், மஞ்சள் குங்குமம், கண்ணாடி உள்ளிட்ட மங்கல பொருட்களை பிரசாதமாக வழங்கினர், மேலும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
போளூா்
போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மலைக் குன்றின் அருகே பழைமை வாய்ந்த ஸ்ரீபச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி அப்பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் ஒன்றுகூடி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து பொங்கலிட்டு, சுவாமிக்கு படைத்து, தேங்காய் உடைத்து, கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனா்.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செங்கம்
செங்கம் வட்ட மருத்துவ குல சமூகம் சாா்பில் 31-ஆண்டு ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதையொட்டி, செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காக்கங்கரை விநாயகா் கோயிலில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.
ஊா்வலத்தின் முன் பெருமாள், ஆண்டாள், லட்சுமி, பச்சைக்காளி, பவளக்காளி, பக்தி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னா், வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கு ஊா்வலம் சென்றடைந்து அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து மாலை பரத நாட்டிய நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் வெங்கட்ராமன், செயலா் பழநி, பொருளாளா் மணி உள்ளிட்ட செங்கம் வட்ட மருத்துவக்குல சமூகத்தினா் செய்திருந்தனா்.

ஶ்ரீ சேஷாத்ரி ஆசிரமம்




