நாமக்கல்லில், பணியின்போது மாரடைப்பால் இறந்த தலைமைக் காவலர் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மோகனூரில் தகனம் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ராசிகுமரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (38). இவர் நாமக்கல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார்.
கூலிப்பட்டி குமரன்நகரில், குடும்பத்துடன் வசித்து வந்த இவர் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணிக்கு செல்ல, சீருடை அணிந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனால் மயக்கம் அடைந்த அவர் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சவுந்தரராஜன் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .
அங்கு தலைமைக் காவலர் சவுந்தரராஜனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி சுகுணா (37) கொடுத்த புகாரின் பேரில், நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தலைமைக் காவலர் சவுந்தரராஜனின் உடல் நேற்று மோகனூர் மின்யானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி மற்றும் காவல் அதிகாரிகள் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.




